2017-05-25 16:07:00

பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளில் வாழும் நிலையில் மாற்றம் தேவை


மே,25,2017. உலகளாவிய பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளில், மனநிலை மற்றும், வாழும் நிலையிலும் மாற்றங்கள் அவசியம் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், பேரிடர் தடுப்பு குறித்த, ஒரு பன்னாட்டு கருத்தரங்கிற்கு செய்தி அனுப்பியுள்ளார்.

மெக்சிகோ நாட்டின் Cancún நகரில் நடைபெற்றுவரும், பேரிடர் அச்சுறுத்தல்களைக் குறைக்கும் வழிகள் பற்றிய ஐந்து நாள் கருத்தரங்கிற்கு, அதற்கு தலைமை வகிக்கும் மெக்சிகோ அரசுத்தலைவர் Enrique Peña Nieto அவர்களுக்குக் கடிதம் அனுப்பியுள்ள, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், பேரிடர் தடுப்பு நடவடிக்கைக்கு, மூன்று பரிந்துரைகளை வழங்கியுள்ளார்.

இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் கடும் மனித, மற்றும் பொருளாதார இழப்புக்களைக் குறைப்பதற்கு, தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய கல்வியறிவும், பயிற்சிகளும் வழங்கப்பட வேண்டும், பேரிடர்களால் அதிகம் பாதிக்கப்படும் மக்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும், இத்தடுப்பு நடவடிக்கைகளில், பேரிடர்களால் அதிகம் தாக்கப்பட்டவர்கள் மற்றும், மிகவும் நலிந்த மக்களின் ஈடுபாடு ஏற்கப்பட வேண்டும் என்று, கர்தினாலின் கடிதம் வலியுறுத்தியுள்ளது.

உலகளாவிய பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளில் பங்கேற்க, திருப்பீடம் எப்போதும் தயாராக உள்ளது எனவும், கர்தினால் பரோலின் அவர்கள் கூறியுள்ளார்.

மக்கள், தன்னலம் மிகுந்து வாழும்போது பேராசை அதிகரிக்கின்றது, எனவே, கடும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் நிகழ்வுகளில் மட்டும் நாம் கவனம் செலுத்தாமல், இயற்கைப் பேரிடர்களால் உண்டாகும் சமூகப் பதட்ட நிலைகள் குறித்தும் கவனம் செலுத்துவது அவசியம் என்றுரைத்துள்ள, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கூற்றையும், அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார், கர்தினால் பரோலின்

Cancún நகரில், மே 22, இத்திங்களன்று ஆரம்பித்த இக்கருத்தரங்கு, மே 26, இவ்வெள்ளியன்று நிறைவடைகின்றது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.