2017-05-16 16:38:00

விளையாட்டு வீரர் இளைய இரசிகர்களுக்கு முன்மாதிரிகையாய்..


மே,16,2017. விளையாட்டு வீரர்களுக்கும், அனைத்து சமுதாயத்திற்கும் இடையே  ஒருங்கிணைந்த நல்லுறவு நிலவுவதற்கு, விளையாட்டுத்துறையிலுள்ள ஒவ்வொருவரும் தங்களை அர்ப்பணிக்க வேண்டுமென்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

இத்தாலியின் Juventus, Lazio ஆகிய இரு கால்பந்து அணிகளின் 180 பேரை, இச்செவ்வாயன்று, திருப்பீடத்தின் கிளமெந்தினா அறையில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த நம் காலத்தில் விளையாட்டின்    முக்கியத்துவம் குறித்து பேச விரும்புவதாகத் தெரிவித்தார்.

விளையாட்டுப் போட்டிகள் சுமுகமாக அமைவதையும், பார்வையாளர்களின் ஆனந்தமான இரசனையையும் பாதிக்கும் வகையில், விளையாட்டரங்கம், சிலவேளைகளில் வன்முறைகளின் இடமாக மாறுகிறது என்றுரைத்த திருத்தந்தை, இந்த நிலை மாறுவதற்கு, விளையாட்டு வீரர்கள் தங்களால் இயன்றதை ஆற்ற வேண்டுமென வலியுறுத்தினார்.

விளையாட்டில் முன்னணியில் இருப்பவர்கள் மீது, மக்களுக்கு குறிப்பாக, இளையோருக்கு ஈர்ப்பு ஏற்பட்டு, அவர்களை தங்கள் வாழ்வுக்கு எடுத்துக்காட்டாகப் பின்பற்றும் ஒரு போக்கு உள்ளதால், விளையாட்டு வீரர்கள், தங்கள் நடத்தையில் சிறந்து விளங்குவதற்கு, பெரும் பொறுப்பு உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

விளையாட்டு வீரர்கள், விளையாட்டிற்குத் தங்களை அர்ப்பணித்துள்ளது, விளையாட்டின் உண்மையான விழுமியங்களுக்குச் சான்றாய் விளங்குவதைக் காட்டுகின்றது எனவும், இவர்களின் போட்டி விளையாட்டிற்குத் தனது நல்வாழ்த்தையும், செபத்தையும் தெரிவிப்பதாகவும் கூறியத் திருத்தந்தை, தனக்காகச் செபிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.