2017-05-16 17:03:00

திருப்பீட நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பு குறித்த அறிக்கை


மே,16,2017. சட்டத்திற்குப் புறம்பே இடம்பெறும் பணப்பரிமாற்றத்தைத் தடைசெய்தல், பயங்கரவாதத்திற்கெதிரான நடவடிக்கைகள் ஆகியவற்றில், பன்னாட்டு கண்காணிப்பு மற்றும், சட்ட அமைப்புகளோடு திருப்பீட நிதி நிறுவனங்கள் வழங்கிவரும் ஒத்துழைப்பு குறித்த ஓர் அறிக்கை இச்செவ்வாயன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் வெளியிடப்பட்டது.

2016ம் ஆண்டில், பன்னாட்டு கண்காணிப்பு அமைப்புகளுடன், திருப்பீட நிதி நிறுவனங்கள் வழங்கிவந்த ஒத்துழைப்பு நடவடிக்கைகள் மற்றும் நிதி நிலவரத்தின் விவரங்களை, AIF எனப்படும் நிதித் தகவல் அமைப்பு வெளியிட்ட ஆண்டறிக்கை குறித்து, திருப்பீட செய்தித் தொடர்பகம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

நிதி சார்ந்த குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுப்பதற்கு, பன்னாட்டு அளவில் ஒத்துழைப்பு அவசியம் என்றும், வத்திக்கான் நாடு, இதில் தனது முழு ஒத்துழைப்பையும் வழங்குகின்றது என்றும், AIF அமைப்பின் தலைவர் René Brülhart அவர்கள் கூறினார்.

உலகளவில் சட்டத்திற்குப் புறம்பே இடம்பெறும் நிதி சார்ந்த நடவடிக்கைகளுக்கு எதிராகச் செயல்படுவதற்கு, வத்திக்கான் நாட்டிற்கும், AIF அமைப்புக்கும் இடையே காணப்படும் ஒத்துழைப்பில், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இடம்பெற்றுள்ளது என்றுரைத்த Brülhart அவர்கள், இது தொடரும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார். 

பல்வேறு நபர்களால் வெளியிடப்பட்ட சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகள் குறித்த அறிக்கைகள், 2015ம் ஆண்டோடு ஒப்பிடுகையில், 2016ம் ஆண்டில் குறைந்துள்ளன என்றும், Brülhart அவர்கள் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.