2017-05-15 17:09:00

இத்தாலியின் ஜெனோவா நகரில் திருத்தந்தையின் பயண விவரங்கள்


மே,15,2017. மே 27, சனிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலி நாட்டின் ஜெனோவா நகருக்கு மேற்கொள்ளும் மேய்ப்புப்பணி பயணத்தின் விவரங்களை, திருப்பீடச் செய்தித் தொடர்பகம் இத்திங்களன்று வெளியிட்டது.

27ம் தேதி காலை, 7.30 மணிக்கு சம்பீனோ விமானத் தளத்திலிருந்து புறப்படும் திருத்தந்தை, 8.15 மணிக்கு ஜெனோவா விமானத் தளத்தை சென்றடைவார்.

8.30 மணிக்கு, அந்நகரின் தொழிலாளர்களை சந்தித்து, அவர்களுடன் கேள்வி பதில் முறையில் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளும் திருத்தந்தை, 10 மணிக்கு, புனித இலாரன்ஸ் பேராலயத்தில், ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியர் அனைவரையும் சந்திப்பார்.

12.15 மணிக்கு, ஜெனோவா நகர இளையோருடன் கலந்துரையாடலை மேற்கொள்ளும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புலம்பெயர்ந்தோர், மற்றும் வறியோருடன் மதிய உணவை பகிர்ந்துகொள்வார்.

பிற்பகல் 3.15 மணிக்கு, அந்நகரின் குழந்தைகள் மருத்துவமனை ஒன்றில், நோயுற்ற குழந்தைகளைச் சந்தித்து ஆசீர் வழங்குவார் திருத்தந்தை.

இந்நாளின் இறுதி நிகழ்வாக, ஜெனோவா நகரின் கென்னடி சதுக்கத்தில் மாலை 5 மணிக்குத் திருப்பலி நிறைவேற்றியபின், அங்கிருந்து மாலை 6.30 மணிக்குப் புறப்பட்டு, 7.30 மணிக்கு மீண்டும் உரோம் நகர் வந்தடைவார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.