2017-05-12 16:31:00

பாத்திமா பயணத்திற்காக பேதுரு பசிலிக்காவில் செபமாலை


மே,12,2017. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 11 இவ்வியாழன் மாலை, உரோம் நகரின் மேரி மேஜர் பசிலிக்கா பேராலயம் சென்று, அங்கு, உரோம் மக்களின் பாதுகாவலாரான அன்னை மரியாவின் திரு உருவத்திற்கு முன் செபித்தார் என்று வத்திக்கான் செய்தித் துறை கூறியுள்ளது.

மேலும், இவ்வெள்ளியன்று பிற்பகல் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பாத்திமா திருத்தலத்திற்கு திருத்தூதுப் பயணம் மேற்கொள்வதையொட்டி, மாலை, 5 மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், இப்பேராலயத்தின் தலைமைப் பணியாளராகப் பணியாற்றும் கர்தினால் ஆஞ்செலோ கொமாஸ்திரி அவர்களின் தலைமையில், செபமாலை பக்திமுயற்சி இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, பாத்திமா அன்னையின் திருஉருவம், பசிலிக்காவிற்கு முன் அமைந்துள்ள Via della Conciliazione சாலையில் பவனியாக கொண்டு செல்லப்படும்.

உலகெங்கும் புகழ்பெற்றுள்ள கத்தோலிக்கத் திருத்தலங்களுக்குச் செல்ல விழையும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிகள் செய்யும் UNITALSI அமைப்பைச் சார்ந்தவர்கள், திருத்தந்தையின் திருத்தூதுப் பயணம் சிறப்புற அமையவேண்டி, இந்த முயற்சியை ஏற்பாடு செய்துள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.