2017-05-09 15:32:00

ஹிரோஷிமாவுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ள அழைப்பு


மே,09,2017. “ஒவ்வொருவரும் சமுதாயத்திற்குக் கொடுப்பதற்கு ஏதாவது ஒன்றை வைத்துள்ளனர், அனைவரின் நலனுக்காக வழங்குவதிலிருந்து யாருமே ஒதுக்கப்படுவதில்லை” என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாயன்று கூறியுள்ளார்.

@Pontifex என்ற முகவரியில், ஏறக்குறைய ஒவ்வொரு நாளும், ஒன்பது மொழிகளில், அன்றாடச் சூழலுக்கு ஏற்ப, செய்திகளை வெளியிட்டுவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாயன்று தனது டுவிட்டரில் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும், இரண்டாம் உலகப்போரில் அணுகுண்டால் தாக்கப்பட்ட ஹிரோஷிமா நகருக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ள வேண்டுமென்று, அந்நகர் ஆளுனர் Hidehiko Yuzaki அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த வாரப் புதன் பொதுமறைக்கல்வியுரைக்குப் பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்துப் பேசிய Yuzaki அவர்கள், திருத்தந்தை, ஹிரோஷிமா நகரைப் பார்வையிட்டு, அமைதியின் செய்தியை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

திருத்தந்தையைச் சந்தித்த பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும் சந்தித்துப் பேசினார், ஆளுனர் Yuzaki.

மறுசீரமைப்பு, நம்பிக்கை மற்றும், அமைதியின் அடையாளமாக அமைந்துள்ள ஹிரோஷிமா நகருக்கு, திருத்தந்தை வருகை தந்தால், அது உலகளாவிய கவனத்தை ஈர்த்து, உலகில், அணு ஆயுதங்கள் ஒழிப்பது குறித்து எல்லாரும் சிந்திப்பதற்கு வழியமைக்கும் என, செய்தியாளர்களிடம் தெரிவித்தார், ஹிரோஷிமா ஆளுனர் Yuzaki.

1981ம் ஆண்டில், புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், ஜப்பானுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஆதாரம் : Agencies / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.