2017-05-09 15:45:00

நைஜீரியாவில் 82 சிறுமிகளின் விடுதலை குறித்து கர்தினால்


மே,09,2017. நைஜீரியாவில், போக்கோ ஹராம் முஸ்லிம் புரட்சியாளர்களால் கடத்தப்பட்டிருந்த 82 சிறுமிகள், மீண்டும் தங்களின் குடும்பங்களோடு இணைந்திருப்பது குறித்து கடவுளுக்கு நன்றி கூறிய அதேவேளை, இச்சிறுமிகளை விடுதலை செய்வதற்கு மூன்றாண்டுகள் காத்திருந்ததன் நோக்கம் புரியவில்லை எனக் கூறியுள்ளார், அந்நாட்டு கர்தினால், John Olorunfemi Onaiyekan.

இச்சிறுமிகளின் விடுதலை குறித்து, பீதேஸ் செய்தியிடம் கருத்து தெரிவித்த கர்தினால், Onaiyekan அவர்கள், நைஜீரிய அரசு, இவ்விடுதலை குறித்த பேச்சுவார்த்தைக்கு மூன்றாண்டுகள் காத்திருந்ததற்கான காரணம் தெரியவில்லை எனக் கூறினார்.

இச்சிறுமிகள், அதிகாரத்தில் இருப்பவர்களின் மகள்களாக இருந்திருந்தால், இவர்களின் விடுதலை எப்போதோ இடம்பெற்றிருக்கும் என்றும், இன்னும் விடுதலைசெய்யப்படாமலிருக்கும் நூற்றுக்கு மேற்பட்ட சிறுமிகளின் நிலைமை என்னவென்று தெரியவில்லை என்றும் கூறியுள்ள, அபுஜா பேராயர் கர்தினால், Onaiyekan அவர்கள், இவர்களின் விடுதலைக்காகச் செபிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். 2014ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி Chibok என்ற இடத்திலுள்ள பள்ளியிலிருந்து இச்சிறுமிகள் கடத்தப்பட்டு, பாலியல் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்தனர் எனச் சொல்லப்படுகிறது.

போக்கோ ஹராம் முஸ்லிம் புரட்சியாளர்கள், கடந்த மூன்றாண்டுகளில், நான்காயிரத்துக்கு மேற்பட்ட சிறாரைக் கொலை செய்துள்ளனர் என ஊடகங்கள் கூறுகின்றன.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.