2017-05-05 16:45:00

இறை ஊழியர் Nguyễn Văn Thuận விசுவாசத்திற்குச் சான்று


மே,05,2017. வியட்நாமைச் சேர்ந்த இறை ஊழியர் கர்தினால் François Xavier Nguyễn Văn Thuận அவர்களின் வீரத்துவப் புண்ணியங்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளது குறித்து கத்தோலிக்கர் தங்கள் மகிழ்வை வெளியிட்டுள்ளனர்.

கம்யூனிச அடக்குமுறையில் 1975ம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட இறை ஊழியர் Nguyễn Văn Thuận அவர்கள், எவ்வித விசாரணையுமின்றி 13 ஆண்டுகள் சிறையில் இருந்தவர், சிறையில் கடுமையான நிலைகளை எதிர்கொண்டவர் மற்றும், விசுவாசத்திற்குச் சான்றாய் விளங்குபவர்.

இவர் தனது அழைப்புக்கேற்ப, ஒத்திசைவான மற்றும், வீரத்துவமான வாழ்வு வாழ்ந்தார் என, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் கூறியுள்ளார். முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், தனது Spe Salvi திருமடலில், இறை ஊழியர் Nguyễn Văn Thuận அவர்கள் பற்றி, இருமுறை குறிப்பிட்டுள்ளார்.

1928ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி பிறந்த இறை ஊழியர் Nguyễn Văn Thuận அவர்கள், 1953ம் ஆண்டில் அருள்பணியாளராகத் திருப்பொழிவு செய்யப்பட்டார். தனது 39வது வயதில், 1967ம் ஆண்டு இவர் ஆயரானார். 1975ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி கைதுசெய்யப்பட்ட இவர், ஒன்பது ஆண்டுகள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். எப்போதும் இரு காவலர்கள் இவரைக் கண்காணித்து வந்தனர். அச்சமயத்தில் அவரிடம் விவிலியம் இல்லாததால், தனக்குக் கிடைத்த தாள்களில், மனப்பாடமாகத் தெரிந்த 300 நற்செய்திப் பகுதிகளை எழுதி வைத்துள்ளார்.

1988ம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்ட இவர், 1991ம் ஆண்டில் உரோம் வந்தார். 2001ம் ஆண்டில் கர்தினாலாக உயர்த்தப்பட்டார். 2002ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி காலமானார் இறை ஊழியர் Nguyễn Văn Thuận.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.