2017-05-02 14:25:00

பாசமுள்ள பார்வையில்: மரணத்திலும் துணைவரும் அன்னை


சாலமோன் ரோசன்பெர்க் (Solomon Rosenberg), அவரது மனைவி, இரு மகன்கள், வயது முதிர்ந்த பெற்றோர் என, ஆறு பேரும் நாத்சி வதைமுகாமிற்குக் கொண்டு செல்லப்பட்டனர். முகாம் அதிகாரிகள் அவர்களுக்கு விதித்திருந்த ஒரே சட்டம்: "வேலை செய்ய முடியும்வரை வாழலாம்; இல்லையேல், சாகலாம்".

சாலமோனின் பெற்றோரால் ஒரு வாரம் வேலை செய்யமுடிந்தது. பின்னர், அவர்கள் இருவரும் நச்சுவாயு உலைக்கு இழுத்துச் செல்லப்பட்டனர். சாலமோனின் முதல் மகன், யோசுவா, நல்ல உடல்நலமும், வலிமையும் பெற்றிருந்தான். ஆனால், இளைய மகன் தாவீதோ, உடல்நலம் குன்றியிருந்தான். எனவே, தாவீதை, அவர்கள், எந்நேரமும் இழுத்துச் செல்லக்கூடும் என்ற அச்சம், அக்குடும்பத்தை ஆட்டிப்படைத்தது.

ஒவ்வொருநாளும் மாலையில், சாலமோன், முகாமுக்குத் திரும்பியதும், தன் மனைவியும், இரு குழந்தைகளும் வேலையிலிருந்து உயிரோடு திரும்பியிருந்தால், நால்வரும் சேர்ந்து, இறைவனுக்கு நன்றி கூறி செபித்தனர்.

ஒருநாள் மாலை, சாலமோன், வேலையிலிருந்து திரும்பியபோது, முகாமில், மூத்த மகன் யோசுவா மட்டும், அழுதபடியே அமர்ந்திருந்ததைக் கண்டார். நடந்ததென்ன என்று கேட்ட தந்தையிடம், "தாவீது, வேலை செய்யமுடியாமல் போனதால், அவனை இழுத்துச்சென்றனர்" என்று சொன்னான், யோசுவா.

"அம்மா எங்கே?" என்று அவர் கேட்டபோது, "தாவீதை அவர்கள் இழுத்துச் சென்றபோது, அவன் பயத்தில் அலறினான். உடனே அம்மா, அவனருகே சென்று, 'தாவீது, பயப்படாதே. என் கரங்களைப் பிடித்துக்கொள்' என்று சொல்லி, அவர்களும் தாவீதுடன் நச்சுவாயு உலைக்குள் போனார்கள்" என்று, யோசுவா கண்ணீரோடு கூறி முடித்தான்.

மரணத்திலும் துணைவரும் துணிவு, அன்னையருக்கு உண்டு.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.