2017-05-01 16:14:00

கத்தோலிக்க பல்கலைக் கழகத்திற்கு கர்தினால் பரோலின் செய்தி


மே 01,2017. இன்றைய உலகில் நிலவும் சூழல், இளையோர் மீது நம் கவனத்தை மிக ஆழமாகத் திருப்புகிறது என்றும், நல்லதொரு எதிர்காலத்தை இளையோர் உருவாக்குவர் என்ற நம்பிக்கை உள்ளதென்றும், வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஏப்ரல் 30, இஞ்ஞாயிறன்று, மிலான் நகரின் தூய இதய கத்தோலிக்க பல்கலைக்கழகத்தின் 93வது ஆண்டு நிறைவுநாள் சிறப்பிக்கப்பட்டதையொட்டி, மிலான் பேராயர், கர்தினால் ஆஞ்செலோ ஸ்கோலா அவர்களுக்கு திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பிய செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.

"இவ்வுலகைப் பயில்வது, அதை ஏற்கனவே மாற்றுவதாகும்" என்ற தலைப்பில் கத்தோலிக்க பல்கலைக் கழகத்தின் 93வது நாள் கொண்டாடப்பட்டதையொட்டி கர்தினால் பரோலின் அவர்கள் அனுப்பிய செய்தியில், எதிர்காலத்தைக் குறித்து இளையோர் கொண்டுள்ள நம்பிக்கையற்ற மனநிலை, அவர்களை செயலற்றவர்களாக மாற்றிவிடும் ஆபத்து உள்ளது என்று குறிப்பிட்டார்.

நன்மை, உண்மை, அழகு என்ற மூன்று அடிப்படை அம்சங்களின் மேல் எழுப்பப்படும் உயர்நிலைக் கல்வி, இளையோரின் மனசாட்சியை தகுந்த முறையில் வளர்க்கவும் உதவியாக உள்ளது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டு, உரோம் நகரின் Tre பல்கலைக்கழகத்தில் கூறியதை, கர்தினால் பரோலின் அவர்கள் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

முதல் உலகப் போரைத் தொடர்ந்து, 1920களில் மிலான் நகரில் துவக்கப்பட்டு இயங்கிவரும் தூய இதய கத்தோலிக்கப் பல்கலைக் கழகம், இன்று, எண்ணிக்கை அளவில், கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்களில் முதன்மையான இடம் பெற்றுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.