2017-04-28 17:08:00

மக்களோடு உடனிருக்க விழையும் திருத்தந்தை - கர்தினால் பரோலின்


ஏப்.28,2017. வன்முறையும், மோதல்களும் நிறைந்துள்ள இடங்களில் திருத்தந்தை மக்களோடு உடனிருக்க விழைவதால், எகிப்து பயணத்தை கைவிட அவர் விரும்பவில்லை என்று, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் வத்திக்கான் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

‘அமைதியின் எகிப்தில், அமைதியின் திருத்தந்தை’ என்ற விருது வாக்குடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்பயணத்தை, ஏப்ரல் 28, 29 ஆகிய இரு நாள்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்டிருப்பதையொட்டி, கர்தினால் பரோலின் அவர்கள் வழங்கியுள்ள இப்பேட்டி, இவ்வெள்ளி பிற்பகல் ஒளிபரப்பானது.

இப்பயணத்தில் தன் உரைகளாலும், செயல்களாலும் அமைதியை நிலைநாட்ட திருத்தந்தை முயற்சிகள் மேற்கொள்வார் என்றும், இவை அனைத்தையும் காட்டிலும், எகிப்து மக்களுடன் தான் துணை நிற்கிறேன் என்ற கருத்தை, திருத்தந்தை தன் திருத்தூதுப் பயணத்தின் வழியே நிலைநாட்ட விரும்புகிறார் என்றும், கர்தினால் பரோலின் அவர்கள், தன் பேட்டியில் வலியுறுத்தினார்.

காப்டிக் ஆர்த்தடாக்ஸ் ஆலயங்களில் நடைபெற்ற வன்முறைகள் குறித்து இப்பேட்டியில் எழுந்த கேள்விக்குப் பதிலளிக்கையில், இவ்வுலகில், வாழ்வை உறுதி செய்யும் பல உன்னத குறிக்கோள்களில் இளையோரை வளர்க்கவேண்டும் என்றும், உன்னத குறிக்கோள்களை அடைய, வன்முறைகள் ஒருநாளும் உதவாது என்பதை இளையோருக்கு உணர்த்தவேண்டும் என்றும் கர்தினால் பரோலின் அவர்கள் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.