2017-04-25 17:03:00

பூர்வீக மக்களின் உண்மையான வளர்ச்சிக்கு திருப்பீடம் அழைப்பு


ஏப்.25,2017. பூர்வீக இன மக்களின் உண்மையான வளர்ச்சியில், குறிப்பாக, அவர்களின் பொருளாதார வளர்ச்சியோடு கலாச்சார மற்றும் சமூக வளர்ச்சியும் ஊக்குவிக்கப்பட வேண்டுமென்று, திருப்பீடம் உலக அரசுகளை கேட்டுக்கொண்டுள்ளது.

பூர்வீக இன மக்களின் உரிமைகள் பற்றிய அறிக்கை வெளியிடப்பட்டதன் பத்தாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, பூர்வீக மக்களின் விவகாரங்கள் குறித்து ஐ.நா.வில் இடம்பெற்ற கூட்டத்தில் இத்திங்களன்று உரையாற்றிய பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள் இவ்வாறு கூறினார்.

பூர்வீக இன மக்களுக்காகத் திட்டமிடப்படும் பொருளாதார நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுவதற்குமுன், முதலில், அம்மக்களுக்கு அறிவிக்கப்பட்டு, அவர்களின் ஒப்புதல் பெறப்பட வேண்டுமெனவும், பேராயர் அவுசா அவர்கள், ஐ.நா.வில் கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பூர்வீக மக்களின் ஆழமான ஏக்கங்களுக்காக, அவர்களின் பேச்சாளராக, தான் இருக்க விரும்பியதையும், இயற்கை மீது நாம் கொண்டிருக்க வேண்டிய மிகப்பெரும் பொறுப்பை, பூர்வீக இன மக்கள், கற்றுத்தருகின்றனர் என்பதையும், பேராயர் அவுசா அவர்கள், தன் உரையில் குறிப்பிட்டார்.

பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், ஐ.நா. தலைமையகத்தில், திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றுபவர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.