2017-04-22 16:23:00

கிறிஸ்தவரும், புத்த மதத்தினரும் அகிம்சா பாதையை ஊக்குவிக்க..


ஏப்.22,2017. இவ்வுலகில், அமைதி மற்றும், வன்முறையற்ற அகிம்சா கலாச்சாரத்தை கிறிஸ்தவர்களும், புத்த மதத்தினரும் ஒன்றிணைந்து ஊக்குவிக்குமாறு, திருப்பீட பல்சமய உரையாடல் அவை கேட்டுக்கொண்டுள்ளது.

புத்தர் பிறந்த நாள் கொண்டாட்டமான வேசாக் (Vesakh) விழாவை முன்னிட்டு,  “கிறிஸ்தவர்களும், புத்த மதத்தினரும் : வன்முறையற்ற பாதையில் ஒன்றிணைந்து நடக்க..” என்ற தலைப்பில், உலகின் புத்த மதத்தினருக்கு செய்தி வெளியிட்டுள்ள திருப்பீட பல்சமய உரையாடல் அவை, இயேசு கிறிஸ்துவும், புத்தரும், அகிம்சையை ஊக்குவித்து,  அமைதி ஆர்வலர்களாகச் செயல்பட்டவர்கள் எனக் கூறியுள்ளது.

இயேசு வன்முறை நிறைந்த காலத்தில் வாழ்ந்தார் எனினும், வன்முறையும், அமைதியும் சந்திக்கும் உண்மையான போர்க்களம் மனித இதயம், ஏனென்றால், மனித இதயத்திற்குள்ளே தீய எண்ணங்கள் பிறக்கின்றன, அந்த இதயத்திலிருந்தே தீய எண்ணங்கள் வெளியாகின்றன என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியிருப்பதை, அச்செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளது அத்திருப்பீட அவை. 

புத்த மதத்தைத் தோற்றுவித்த புத்தர் அவர்களும், அகிம்சை மற்றும், அமைதிச் செய்தியை அறிவித்தார் என்றும், ஒருவர் போரில், ஆயிரம் மனிதர்களை, ஆயிரம் முறைகள் வெல்லலாம், ஆயினும், தன்னையே வெல்தல், மற்றவரை வெல்வதைவிட பெரியது என்றும், புத்தர் கூறியுள்ளதை நினைவுபடுத்தியுள்ளது அச்செய்தி.

நம் இரு மதங்களின் தனித்துவத்தை அங்கீகரிக்கும் அதேவேளை, வன்முறை மனித இதயத்திலிருந்து பிறக்கின்றது என்பதையும், தனிப்பட்டவர்களின் தீமைகள் அமைப்புமுறை தீமைகளுக்கு இட்டுச் செல்கின்றன என்பதையும் நாம் ஏற்கின்றோம் எனவும் அச்செய்தி கூறுகிறது.

நம் குடும்பங்களிலும், சமூக, அரசியல், பொது மற்றும் சமய நிறுவனங்களிலும், வன்முறைப் புறக்கணிக்கப்பட்டும், மனிதர் மதிக்கப்பட்டும் வாழப்படுகின்ற ஒரு புதிய வாழ்வுமுறையை வளர்ப்பதற்கு உயிரூட்டத்துடன் நம்மை அர்ப்பணிப்போம் என்றும், புத்த மதத்தினருக்கென வெளியிடப்பட்டுள்ள அச்செய்தி அழைப்பு விடுத்துள்ளது.

திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran, அதன் செயலர் ஆயர் Miguel Ángel Ayuso Guixot, MCCJ ஆகிய இருவரும், அச்செய்தியில் கையெழுத்திட்டுள்ளனர்.

தெற்காசிய நாடுகளில் சிறப்பிக்கப்படும் வேசாக் விழா, லூனார் நாட்காட்டியை வைத்து, ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு நாள்களில் சிறப்பிக்கப்படுகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.