2017-04-21 15:44:00

திருத்தந்தையின் நம்பிக்கை தரும் டுவிட்டர் செய்திகள்


ஏப்.21,2017. "நமது அவலம், பலவீனம் இவற்றின் மிகத் தாழ்ந்த நிலையை நாம் அடைந்துவிடும் வேளையில், நாம் மீண்டும் எழுந்துவர, உயிர்த்த கிறிஸ்து, சக்தியைத் தருகிறார்" என்ற நம்பிக்கைச் செய்தியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 21, வெள்ளியன்று தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

மேலும், இவ்வியாழனன்று அவர் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், "கிறிஸ்து உயிர்த்துவிட்டதால், நம் வாழ்வில் நிகழும் மிக எதிர்மறையான நிகழ்வுகளையும், புதிய இதயத்துடன், புதிய கண்களுடன் நம்மால் காண முடியும்" என்ற சொற்கள் இடம்பெற்றன.

புனித வாரத்திலும், உயிர்ப்புப் பெருவிழாவைத் தொடர்ந்து வரும் நாள்களிலும், கிறிஸ்துவின் மரணம், உயிர்ப்பு இவை நமக்குத் தரும் நம்பிக்கையைக் குறித்து, திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள் அமைந்து வந்துள்ளன.

@pontifex என்ற முகவரியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒவ்வொரு நாளும் ஒன்பது மொழிகளில் வெளியிட்டு வரும் டுவிட்டர் செய்திகள், இதுவரை 1.168 என்ற எண்ணிக்கையை அடைந்துள்ளது என்பதும், இச்செய்திகளைத் தொடர்வோரின் எண்ணிக்கை, 1,05,96,831 என்பதும் குறிப்பிடத்தக்கன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.