2017-04-20 16:32:00

அரசின் நல்ல திட்டங்களால், புலம் பெயர்தலைக் குறைக்கமுடியும்


ஏப்.20,2017. நீடித்திருக்கக்கூடிய முன்னேற்ற இலக்குகளை தகுந்த முறையில் அடைவதற்கு, அரசுகள் நல்ல திட்டங்களை வகுத்தால், புலம் பெயர்தல் என்ற நிகழ்வை பெருமளவு குறைக்கமுடியும் என்று, திருப்பீட உயர் அதிகாரி, ஐ.நா. அவையில் கூறினார்.

ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் கூட்டங்களில் திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்கும் பேராயர் பெர்னார்த்தித்தோ அவுசா அவர்கள், குடிபெயர்தல் குறித்து மேற்கொள்ளப்பட்ட பன்னாட்டு உரையாடலில் இவ்வாறு கூறினார்.

தரமான கல்வி, மதிப்புள்ள வேலை, வீட்டு வசதி, நலவாழ்வு பராமரிப்பு ஆகிய அடிப்படைத் தேவைகளை தீர்ப்பதற்கு அரசுகள் தவறும்போது, குடிபெயர்தல் நிகழ்கிறது என்று சுட்டிக்காட்டிய பேராயர் அவுசா அவர்கள், அநீதமான சமுதாய ஏற்றத்தாழ்வுகள், ஒட்டுமொத்த சமுதாயத்தையும் நிலைகுலையச் செய்துவிடுகின்றன என்று கூறினார்.

புலம்பெயர்தல் என்ற எதார்த்தம், உலகெங்கும் பரவியுள்ளதால், புலம்பெயர்ந்தோரின் உரிமைகளும், அவர்களுக்கு வழங்கப்படவேண்டிய அடிப்படை மதிப்பும் பெருமளவு குறைந்து வருகிறது என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மடல்களிலிருந்தும், உரைகளிலிருந்தும் பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.