2017-04-12 16:20:00

இலங்கையில் ஆன்மீகமும், சுற்றுச்சூழலும் இணைந்த சிலுவைப்பாதை


ஏப்.,12,2017. இலங்கையின் Nugegodaவைச் சேர்ந்த புனித யோசேப்பு பெண்கள் பள்ளியின் மாணவியர், பெற்றோர், மற்றும் அருள் சகோதரிகள் இணைந்து, ஒரு மலைப்பகுதியில் சிலுவைப்பாதை பக்தி முயற்சியை மேற்கொண்டனர் என்று ஆசிய செய்தி கூறுகிறது.

திருக்குடும்பச் சபையைச் சேர்ந்த அருள் சகோதரிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சிலுவைப்பாதை முயற்சியின் இறுதியில், மலைப்பாதையிலிருந்து இறங்கி வரும் வேளையில், மாணவியரும், மற்றவர்களும் அம்மலைப் பாதையில் இருந்த குப்பைகளைச் சேகரித்து, அப்பகுதியைத் தூய்மைப்படுத்தினர் என்று இச்செய்தி மேலும் கூறுகிறது.

ஹினிதுமா கல்வாரி (Hiniduma Calvary) என்றழைக்கப்படும் இம்மலைப் பகுதியில் அமைந்துள்ள சிலுவைப்பாதை, இலங்கையில் பழம்பெரும் சிலுவைப்பாதைகளில் ஒன்று எனக் கூறப்படுகிறது.

இந்த சிலுவைப்பாதை பக்தி முயற்சி, ஆன்மீகம் மற்றும், சுற்றுச்சூழல் என்ற இரு கண்ணோட்டங்களில் நடைபெற்றது, பொருளுள்ளதாக இருந்தது என்று, இம்முயற்சியை மேற்கொண்ட ஒரு மாணவி கூறினார். 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.