2017-04-11 14:18:00

தவக்காலச் சிந்தனை: அர்த்தமுள்ள வழிபாடு


இயேசு, தான் உயிர்வாழ்ந்த காலங்களில் மேற்கொண்ட பயணங்கள் எண்ணிலடங்கா. அவர் மேற்கொண்ட அனைத்துப் பயணங்களிலும், முக்கியத்துவம் பெறுவது, அவரது கல்வாரிப்பயணம். இப்பயணத்திலே, இயேசுவின் தியாகம் மற்றும் உறவின் உச்சத்தை தியானித்து, உணர்ந்து கொள்ளமுடிகின்றது. இப்பயணம், சிந்தனைக்கு மட்டுமன்றி, செயலுக்கும் அழைப்புவிடுக்கின்றது. இயேசுவின் பாடுகளை நினைத்து ஒரு சில கண்ணீர் துளிகளை சிந்திவிட்டு, சிலுவையில் அறையப்பட்ட இயேசுவை, வெள்ளியிலும், தங்கத்திலும் செய்து, கழுத்தில் மாட்டிக்கொண்டு, வலம் வரும் ஒரு வாழ்வை விடுத்து, இந்த தவக்காலத்திலே, இயேசுவின் மதிப்பீடுகளை உள்வாங்கி, புதிய மனிதர்களாக மாற்றம் பெறுவோம். இந்த தவக்காலம், நம்மை, சிந்திக்க மட்டுமன்றி, செயலுக்கும் அழைத்துச் செல்லட்டும். இயேசுவின் மனநிலை, நிலைப்பாடு, கொள்கைப்பிடிப்பு, மதிப்பீடுகள், விழுமியங்கள் ஆகியவற்றை நம்மில் விதைகளாக விதைப்போம். அவை, 30 மடங்காகவும், 60 மடங்காகவும், 100 மடங்காகவும் பலன்தரும் வகையில்  வாழ்ந்து காட்டுவோம். அப்பொழுதுதான், நமது வழிபாடு அர்த்தம் பெறும். - அருள்சகோதரர் செலூக்காஸ் சே.ச.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.