2017-04-08 15:57:00

இந்திய அரசுக்கு எதிராக 9 வயது சிறுமி வழக்கு


ஏப்.08,2017. இந்திய அரசு, காலநிலை மாற்றத்தின் பாதிப்புக்களைக் குறைப்பதற்கு, தகுந்த நடவடிக்கைகள் எடுக்கத் தவறியுள்ளது என்று சொல்லி, மத்திய அரசுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளார் ஓர் ஒன்பது வயது சிறுமி.

சுற்றுச்சூழல் குறித்த சட்டங்களை அமல்படுத்த அரசு தவறியுள்ளது என்று சொல்லி, மத்திய அரசுக்கு எதிராக, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார், ஒன்பது வயது சிறுமி ரிதிமா பாண்டே (Ridhima Pandey).

இச்சிறுமி சமர்ப்பித்துள்ள 52 பக்க மனுவில், காலநிலை மாற்றத்தால், இந்தியர்களில், மிகவும் நலிவடைந்தவர்களே அதிகம் பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என்றும், காலநிலை மாற்றத்தின் பாதிப்புக்களைக் குறைப்பதற்கு, அறிவியல் சார்ந்த மற்றும், பயனுள்ள செயல்திட்டங்களை அரசு எடுப்பதற்கு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும், மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியமும் இன்னும் இரு வாரங்ளில் பதிலளிக்குமாறு, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வழக்கு குறித்த அடுத்த விசாரணை வருகிற 4ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமி ரிதிமா பாண்டே அவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலரும், வழக்கறிஞருமான ராகுல் சவுத்ரி என்பவரின் மகள் ஆவார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.