2017-04-05 16:14:00

பிலிப்பின்ஸ் அரசுத் தலைவர் மீது தனிப்பட்ட பகை இல்லை


ஏப்.,05,2017. பிலிப்பின்ஸ் அரசுத் தலைவர் Rodrigo Duterte அவர்கள் மீது தனிப்பட்ட முறையில் எந்தப் பகையும் தங்களுக்கு இல்லை என்றும், அவரது கொள்கைகளுக்கு எதிராகவே தாங்கள் போராடி வருவதாகவும், பிலிப்பின்ஸ் ஆயர் பேரவை அறிவித்துள்ளது.

அண்மைய நாள்களில், கத்தோலிக்க திருஅவை மீது, அரசுத்தலைவர் Duterte அவர்கள் வெளியிட்டு வரும் சொற்போரைத் தொடர்ந்து, அரசின் பிரதிநிதிகளுக்கும், தலத்திருஅவை அதிகாரிகளுக்கும் இடையே ஒரு சந்திப்பு நடந்தது என்று UCAN செய்தி கூறியுள்ளது.

இச்சந்திப்பிற்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய பிலிப்பின்ஸ் ஆயர் பேரவைத் தலைவர், சாக்ரடீஸ் வியேகாஸ் அவர்கள், போதைப்பொருளை நாட்டிலிருந்து ஒழிக்க, அரசுத்தலைவர் Duterte அவர்கள் மேற்கொண்டு வரும் கடினமான நடவடிக்கைகளை தாங்கள் எதிர்ப்பதாகவும், இது எந்த வகையிலும், அவருக்கு எதிரான தனிமனித தாக்குதல் அல்ல என்றும், தெளிவுபடுத்தினார்.

கத்தோலிக்கத் திருஅவையை அரசுத் தலைவர் தாக்குவது குறித்து பேசிய ஒரு சில ஆயர்கள், வெளியிலிருந்து வரும் தாக்குதல்கள், பிலிப்பின்ஸ் தலத்திருஅவையை இன்னும் நெருக்கமாகப் பிணைக்குமே தவிர, சிதைக்காது என்று கூறியுள்ளனர்.

2016ம் ஆண்டு ஜூலை மாதம் Duterte அவர்கள் பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை 8000த்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்று மனித உரிமை ஆர்வலர்கள் கூறிவருகின்றனர்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.