2017-04-03 16:58:00

இம்மாத இறுதி நாட்களில் எகிப்தில் திருத்தந்தை


ஏப்.,03,2017. இம்மாதம் 28 மற்றும் 29 தேதிகளில் எகிப்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ள உள்ள திருப்பயணம் குறித்து, மேலும் சில விவரங்களை வெளியிட்டுள்ளது, திருப்பீடம்.

28ம் தேதி வெள்ளிக்கிழமையன்று, உரோம் நகரிலிருந்து உள்ளூர் நேரம் 10.45 மணிக்கு புறப்படும் திருத்தந்தை, எகிப்தின் தலைநகர் கெய்ரோவை இத்தாலிய நேரம் 2 மணிக்குச் சென்றடைவார். எகிப்து குடியரசுத் தலைவரையும், இஸ்லாமிய தலைமை மதகுருவையும் சந்தித்தபின், அமைதி குறித்த அனைத்துலகக் கருத்தரங்கில் பங்குபெறுவோருக்கு உரை ஒன்றும் நிகழ்த்துவார், திருத்தந்தை.

பின், மாலையில், அரசு அதிகாரிகளை சந்தித்து உரை வழங்குவதும், அலக்சாந்திரியாவின் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபைத்தலைவர் போப் இரண்டாம் தவாத்ராஸ் அவர்களை சந்திப்பதும், வெள்ளிக்கிழமையின் திருப்பயணத்திட்டத்தில் உள்ளன.

சனிக்கிழமை பயணத்திட்டத்தில், காலையில் விசுவாசிகளுக்கு திருப்பலி நிறைவேற்றல், பின்னர் எகிப்து ஆயர்களுடன் இணைந்து உணவருந்துதல், அருள்பணியாளர்கள், துறவறத்தார் மற்றும் அருள்பணி பயிற்சி மாணவர்களோடு செப வழிபாட்டில் கலந்துகொள்ளல் போன்றவை இடம்பெறுகின்றன.

தன் இரண்டு நாள் திருப்பயணத்தை நிறைவுச் செய்து, ஏப்ரல் 29ம் தேதி, சனிக்கிழமை இரவு, இத்தாலிய நேரம் 8.30 மணிக்கு உரோம் நகர் வந்தடைவார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.