2017-03-31 16:15:00

கிறிஸ்தவர்கள் கொல்லப்படுவது குறித்து ஆஸ்திரேலிய ஆயர்கள் கவலை


மார்ச்,31,2017. உலகில் உள்ள அனைத்து மதத்தினரிலும், கிறிஸ்தவர்களே மிக அதிக அளவில் வன்முறைகளைச் சந்தித்து வருவது பெரும் கவலை தருகிறது என்று, ஆஸ்திரேலிய ஆயர்கள் கூறியுள்ளனர்.

ஆஸ்திரேலிய ஆயர் பேரவையின் இணையதளத்தில், மார்ச் 30, இவ்வியாழனன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், ஒவ்வோர் ஆண்டும், ஒரு இலட்சத்திற்கும் அதிகமான கிறிஸ்தவர்கள், தங்கள் மத நம்பிக்கைக்காகக் கொல்லப்படுகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

வமுறைகளைச் சந்திப்பது கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல, மாறாக, யாஸிதிகள், யூதர்கள், இஸ்லாமியர், மற்றும், பல்வேறு சிறுபான்மை மதத்தவர் என்று, ஆஸ்திரேலிய ஆயர் பேரவையின் தலைவர், பேராயர் டென்னிஸ் ஹார்ட் அவர்கள் இவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கத்திய நாடுகளில், மத நம்பிக்கை குறைந்து, கடவுள் நம்பிக்கையற்ற நிலை ஆழமாக வேரூன்றியுள்ளதால், எந்த ஒரு மத நம்பிக்கையும் இந்நாடுகளில் மரியாதை பெறாமல் போகின்றது என்று ஆஸ்திரேலிய ஆயர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அனைத்து மதத்தவரையும் அரவணைக்கும் மனதை கொண்டிருப்பதே, உண்மையான மத நம்பிக்கை என்ற உயர்ந்த கோட்பாட்டின் ஆணிவேர் என்று ஆயர்களின் வலைத்தளம் வலியுறுத்துகிறது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.