2017-03-17 15:22:00

திருத்தந்தையின் Instagramக்கு வயது ஒன்று


மார்ச்,17,2017. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் Instagram சமூக வலைத்தளம், திருத்தந்தையின் இரக்கத்திற்குச் சான்றாக உள்ளது என்று, திருப்பீட மக்கள்தொடர்புத் செயலகத்தின் செயலர் பேரருள்திரு Lucio Adrian Ruiz அவர்கள், தெரிவித்தார்.

@Franciscus என்ற முகவரியில், திருத்தந்தையின் Instagram ஆரம்பிக்கப்பட்டு, மார்ச் 19, இஞ்ஞாயிறன்று ஓராண்டு நிறைவுறுவதை முன்னிட்டு, வத்திக்கான் வானொலிக்கு பேட்டி அளித்த பேரருள்திரு Ruiz அவர்கள், டிஜிட்டல் உலகில், நற்செய்தி அறிவிப்பது குறித்த திருத்தந்தையின் கண்ணோட்டம் பற்றியும் பேசினார்.

Instagram வலைத்தளத்தின் இணை நிறுவனரான கெவின் அவர்கள், திருத்தந்தையை  சந்தித்தபோது, இந்த வலைத்தளம் பற்றிப் பேசியதாகவும், குறிப்பாக, படங்கள் வழியாக இந்தச் சமூக வலைத்தளம் மக்கள் தொடர்பு செய்தியைக் கொண்டிருக்கின்றது என்று விளக்கியதாகவும், இதற்குப் பின்னர், இந்த வலைத்தளம் பற்றிய சிந்தனை திருத்தந்தைக்கு ஏற்பட்டது என்றும் தெரிவித்தார் பேரருள்திரு Ruiz .

கடந்த ஆண்டு மார்ச் 19ம் தேதி தொடங்கப்பட்ட திருத்தந்தையின் இந்த வலைத்தளத்தை 35 இலட்சம் பேர் பின்பற்றுகின்றனர் என்றும், இதில், ஒவ்வொரு வாரமும் பிரசுரிக்கப்படும் படங்களை, ஏறக்குறைய ஒரு கோடிப் பேர் பார்வையிட்டுள்ளனர் என்றும், பேரருள்திரு Ruiz அவர்கள் கூறினார்.

மேலும், 'இறைவனோடு 24 மணி நேரங்கள்' பக்தி முயற்சியின் ஒரு பகுதியான ஒப்புரவு அருளடையாள வழிபாட்டை, மார்ச் 17, இவ்வெள்ளி மாலை 5 மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், திருத்தந்தை தலைமையேற்று நடத்துகிறார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 25ம் தேதி, மிலான் நகருக்கு மேய்ப்புப்பணி பயணம் மேற்கொள்வதை முன்னிட்டு, இவ்வாண்டு கொண்டாடப்படும் 'இறைவனோடு 24 மணி நேரங்கள்' முயற்சியை இவ்வெள்ளியன்று நிறைவேற்றுகிறார் திருத்தந்தை.

'இரக்கத்தையே விரும்புகிறேன்' (மத்.9:13) என்ற சொற்கள், இவ்வாண்டின் 'இறைவனோடு 24 மணி நேரங்கள்' முயற்சிக்கு மையக்கருத்தாக அமைந்துள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.