2017-03-17 15:50:00

காசநோயை கண்டுபிடிக்க உதவும் சூரிய சக்தி


மார்ச்,17,2017. ஆப்ரிக்க நாடான கானாவில், காசநோயால் ஏற்படும் உயிரிழப்புக்களைத் தடுத்து நிறுத்தும் நோக்கத்தில், புதுமையானதொரு திட்டத்தை, நாடு முழுவதும் அறிமுகம் செய்துள்ளது அந்நாட்டு அரசு.

வேகமாகத் தொற்றக்கூடிய காசநோயால், கானாவில் ஆண்டுக்கு ஒன்பதாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழக்கும்வேளை, காசநோயை விரைவில் கண்டுபிடித்து, அந்நோயால் உயிரிழக்கும் மக்களைக் காப்பாற்றும் நோக்கத்துடன், சூரிய சக்தியில் இயங்கும் எக்ஸ்ரே கருவிகளை அறிமுகம் செய்துள்ளது கானா அரசு.

இதன் மூலம், நாட்டின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளும், மின்சார வசதியும் இல்லாத தொலைதூரப் பகுதிகள் உட்பட, அனைத்துப் பகுதிகளிலும் காசநோய்த் தொற்றை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து குணப்படுத்தவும், மற்றவர்களுக்கு அந்நோய் பரவாமல் தடுக்கவும் முடியுமென கானா அரசு கருதுகிறது.

மேற்கு ஆப்ரிக்காவில் இபோலாவால் கொல்லப்பட்டதாகப் பதிவானவர்களின் எண்ணிக்கையைவிட, கானாவில் காசநோயால், இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் எனக் கூறப்படுகின்றது.

கானா நாட்டில், 2035ம் ஆண்டுக்குள் காச நோயை முற்றிலும் ஒழிப்பதற்கு அரசு திட்டமிட்டு வருகிறது. அந்நாட்டில், ஆயிரத்திற்கு 7.5 பேர் வீதம், காச நோய்க் கிருமிகளால் தாக்கப்படுகின்றனர் என்று, ஒரு புள்ளி விபரம் கூறுகிறது.

உலகில், ஒவ்வொரு நிமிடத்திற்கும் மூன்று பேர் வீதம் காச நோயால் இறக்கின்றனர்.  

ஆதாரம் : Agencies /பிபிசி/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.