மார்ச்,17,2017. ஒப்புரவு அருளடையாளத்தை சிறப்பாக நிறைவேற்றுபவர், நல்ல ஆயராம் இயேசுவின் உண்மையான நண்பராக இருப்பார், இந்த நட்புறவின்றி, ஒப்புரவு அருளடையாளத் திருப்பணிக்குத் தேவையான, தந்தைக்குரிய அன்பை வளர்த்துக்கொள்வது கடினம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
கத்தோலிக்கத் திருஅவையின் பாவ மன்னிப்பு நீதிமன்றம் (Apostolic Penitentiary) ஒப்புரவு அருளடையாளம் பற்றி நடத்தும் பயிற்சிப் பாசறையில் கலந்துகொள்ளும் 700 பேரை, இவ்வெள்ளியன்று, அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, ஒப்புரவு அருளடையாளத்தை நன்றாக நிறைவேற்றுபவர் யார்? இந்த அருளடையாளத்தை, நன்றாக நிறைவேற்றுபவராக மாறுவது எப்படி? என்பதை, மூன்று கூறுகள் வழியாக விளக்க விரும்புவதாகத் தெரிவித்தார்.
ஒப்புரவு அருளடையாளத்தை நன்றாக நிறைவேற்றுபவர், முதலில் செப மனிதராக இருக்க வேண்டும், இரண்டாவதாக, தூய ஆவியாரின் மனிதராக, தன்னில் செயல்படும் ஆவியானவரைக் கண்டுகொள்பவராக இருக்க வேண்டும், மூன்றாவதாக, நற்செய்தியை அறிவிப்பவராக இருக்க வேண்டும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றுபவர் செபிக்கும் மனிதராக இருக்கும்போது, தான் ஒரு பாவி எனவும், தான் மன்னிக்கப்பட்டவர் எனவும், முதலில் அறிந்துகொள்வார் என்றுரைத்த திருத்தந்தை, பாவியிடம் அவசியமின்றி கடினமாக நடந்துகொள்ளும் எவ்வித எண்ணத்தையும் தவிர்த்து நடப்பதற்கு, செபம் உதவும் என்று குறிப்பிட்டார்.
மேலும், தூய ஆவியாரின் மனிதராகவும், அந்த ஆவியாரில் தேர்ந்து தெளிபவராகவும் இருக்கும்போது, இந்த அருளடையாளத்தை நிறைவேற்றுபவர், தனது விருப்பத்தைச் செய்யாமலும், தனது சொந்தக் கோட்பாடுகளைப் போதிக்காமலும் இருந்து, எப்போதும், கடவுளின் விருப்பத்தையே தேடுவார் என்றும் கூறினார், திருத்தந்தை.
ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றும் இடம், நற்செய்தி அறிவிக்கும் உண்மையான இடம் என்றும், இவ்விடத்தில், உண்மையிலேயே, இரக்கமுள்ள இறைவனையும், அவரின் இரக்கத்தையும் சந்திக்கிறோம் என்றும், திருத்தந்தை கூறினார்.
ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றுபவர், ஒவ்வொரு நாளும், தீமை மற்றும் பாவத்தினின்று விலகி நடக்கையில், அவரின் திருப்பணி, மேய்ப்புப்பணிக்கு உண்மையாகவே முன்னுரிமை கொடுப்பதாக அமைந்திருக்கும் என்றும் கூறியத் திருத்தந்தை, இந்த அருளடையாளத்தைப் பெற வருகின்றவர்களுக்காக எப்போதும் செபிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
தனக்காகச் செபிக்குமாறும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையின் பாவ மன்னிப்பு நீதிமன்றம், நம் ஆன்மாவுக்கு இன்றியமையாத மருந்தாகிய இறை இரக்கத்தை வழங்கும், இரக்கத்தின் நீதிமன்றம், இந்த நீதிமன்றம் தனக்குப் பிடிக்கும் என்றும், கூறினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |