2017-03-17 15:52:00

உலகளாவிய மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு நிதியை அதிகரிக்க...


மார்ச்,17,2017. உலக அளவில் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு, அமெரிக்க ஐக்கிய நாடு செலவழிக்கும் தொகை அதிகரிக்கப்பட வேண்டுமென்ற பல்சமயத் தலைவர்களின் விண்ணப்பத்திற்கு, அந்நாட்டு கத்தோலிக்கத் தலைவர்களும் தங்களின் ஆதரவை வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஐந்து ஆயர்கள் உட்பட, 106 பல்சமயத் தலைவர்கள், காங்கிரஸ் அவைத் தலைவர்களுக்கு, இவ்வியாழனன்று எழுதியுள்ள கடிதத்தில், அமெரிக்க அரசுத் துறை வழியாக, மனிதாபிமான மற்றும், வளர்ச்சித் திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

2018ம் நிதியாண்டின் வரவு செலவு அறிக்கையின் சுருக்கத்தை, அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்ட சில மணிநேரங்களுக்குள், அந்நாட்டின் நூற்றுக்கும் மேற்பட்ட பல்சமயத் தலைவர்கள், இக்கடிதத்தை அனுப்பியுள்ளனர்.

இந்த அறிக்கையில், இராணுவத்திற்குரிய செலவு 5,400 கோடி டாலர் அதிகரிக்கப்பட்டுள்ளது மற்றும், இராணுவமல்லாத  திட்டங்களுக்கு ஆகும் செலவு 28 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது என, அக்கடிதம் சுட்டிக் காட்டுகின்றது.

குறிப்பாக, அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும், மெக்சிகோவுக்கும் இடையே எல்லைச் சுவர் கட்டுவதற்கு, 260 கோடி டாலர் உட்பட, உள்நாட்டுப் பாதுகாப்புக்கென சிறிய அளவில் நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.  

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.