2017-03-16 16:00:00

பாத்திமா அன்னையின் நம்பிக்கையை உருவாக்கும் செய்தி


மார்ச்,16,2017. அன்னை மரியா, பாத்திமா நகரில் தந்த செய்தி,  மனமாற்றத்திற்கும், செபத்திற்கும் விடுக்கப்பட்ட அழைப்பு மட்டுமல்ல, மாறாக, இறைவனின் இருப்பு இவ்வுலகில் உள்ளது என்ற நம்பிக்கையை உருவாக்கும் செய்தியாகவும் அமைந்தது என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

பாத்திமா அன்னையின் செய்தி குறித்தும், மேமாதம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாத்திமா திருத்தலத்திற்கு மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணம் குறித்தும், கர்தினால்கள் குழுமத்தின் தலைவரான கர்தினால் ஆஞ்செலோ சொதானோ அவர்கள், இப்புதனன்று, வழங்கிய ஓர் உரையில் இவ்வாறு கூறினார்.

வத்திக்கானில் இயங்கிவரும் போர்த்துக்கல் தூதரகத்தில் கர்தினால் சொதானோ அவர்கள் இவ்வுரையை வழங்கியபோது, பாத்திமா மறைமாவட்ட ஆயர், António Marto Dos Santos அவர்களும், இக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.

கத்தோலிக்கத் திருஅவையில் அன்னை மரியாவுக்கு வழங்கப்பட்டுள்ள தனித்துவமிக்க பங்கைக் குறித்துப் பேசிய கர்தினால் சொதானோ அவர்கள், போர்மேகங்களால் இருண்டிருந்த இவ்வுலகில், பாத்திமா அன்னை, நம்பிக்கையின் விடிவெள்ளியாகத் தோன்றினார் என்று தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

பாத்திமா அன்னையின் திருத்தலத்திற்கும் திருத்தந்தையருக்கும் உள்ள தொடர்புகள் குறித்து எடுத்துரைத்த கர்தினால் சொதானோ அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் பயணம், அன்னையின் மீது நமது பக்தியையும், அன்னை வழங்கிய நம்பிக்கை செய்தியில் ஆழ்ந்த பிடிப்பையும் உருவாக்கும் என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.