2017-03-10 15:25:00

தென் கொரியாவில் பிரிவினைகளைத் தவிர்க்க பல்சமயத் தலைவர்கள்


மார்ச்,10,2017. தென் கொரிய அரசுத்தலைவர் Park Geun-hye அவர்களை, பதவியில் இருந்து நீக்கிடும் நாடாளுமன்றத்தின் தீர்மானத்தை அந்நாட்டின் அரசியல் சாசன நீதிமன்றம் இவ்வெள்ளியன்று உறுதி செய்துள்ளவேளை, குடிமக்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்குமாறு, பல்சமயத் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அந்நாட்டின் கத்தோலிக்க, பிரிந்த கிறிஸ்தவ சபைகள் மற்றும், புத்த மதத் தலைவர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் அனைவரும் ஒற்றுமையைக் காக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

தென் கொரிய அரசுத்தலைவர் குறித்த இவ்விவகாரம் தொடர்பாக அறிக்கை  வெளியிட்டுள்ள, அந்நாட்டு கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Iginus Kim Hee-joong அவர்கள், அரசியல் சாசன நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு, எல்லாரையும் திருப்திப்படுத்த முடியாது என்பதால், மக்கள் மோதல்களையும், பிளவுகளையும், கீழ்ப்படியாமையையும் விலக்கி நடக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

தென் கொரியாவின் அரசுத்தலைவர் Park Geun-hye உள்ளிட்டவர்கள் மீது, ஊழல் குற்றம்சாட்டப்பட்டு, தீர்ப்பு வெளியாகியிருக்கும் நிலையில், அந்நாட்டின் ஆளும் பழமைவாதக் கட்சியைச் சேர்ந்த 29 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் கட்சியிலிருந்து விலகியுள்ளனர்.

இந்நிலையில், தென் கொரியாவில், இன்னும் இரண்டு மாதங்களுக்குள் அரசுத்தலைவர் தேர்தல் நடக்கும் எனச் சொல்லப்பட்டுள்ளது.

தன்னுடைய நெருங்கிய தோழி Choi Soon-silலை, நாட்டின் விவகாரங்களில் தலையிட அனுமதித்ததன் மூலம், Park Geun-hye சட்டத்தை மீறியுள்ளார் என்று, அரசியல் சாசன நீதிமன்றம் கூறியுள்ளது.

தென் கொரியாவின் முதலாவது பெண் அரசுத்தலைவராகப் புகழ்பெற்ற Park Geun-hye அவர்கள், சனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டு, அதிகாரத்தில் இருந்து நீக்கப்படும் முதலாவது தலைவராகவும் மாறியுள்ளார்

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.