2017-03-03 16:03:00

அருள்பணி டாம் விடுதலைக்காக, இந்தியாவில் செபம்


மார்ச்,03,2017. ஏமன் நாட்டில், அருள்பணி டாம் உழுன்னலில் அவர்கள் கடத்தப்பட்டு ஓராண்டு நிறைவுறுவதையொட்டி, அவரின் விடுதலைக்கென, இந்திய சலேசிய சபையினர், இச்சனிக்கிழமையன்று செபக் கூட்டங்களை நடத்தவுள்ளனர்.

2016ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி, ஏமன் நாட்டின் ஏடன் நகரில், பிறரன்பு மறைப்பணி அருள்சகோதரிகள் சபையினரின் வயது முதிர்ந்தோர் இல்லம் தாக்கப்பட்டபோது, அவ்வில்லத்திலிருந்து, அருள்பணி டாம் உழுன்னலில் அவர்கள் கடத்தப்பட்டார்.

அருள்பணி டாம் அவர்கள், இன்னும் விடுதலை செய்யப்படாமல் இருப்பது, தங்களுக்கு மிகுந்த கவலை தருகின்றது எனத் தெரிவித்துள்ள, பெங்களூரு சலேசிய சபை மாநில அருள்பணியாளர்கள், அவரின் விடுதலைக்கென சிறப்பு செப முயற்சிகளை ஊக்குவித்துள்ளனர்.

சலேசிய சபையின் அருள்பணியாளராகிய டாம் அவர்கள், ஏடனில் பணியாற்றிவந்த திருக்குடும்ப பங்கு, 2015ம் ஆண்டு செப்டம்பரில், சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்ட பின்னர், அவர், பிறரன்பு மறைப்பணி அருள்சகோதரிகள் சபையினர் நடத்திய வயது முதிர்ந்தோர் மற்றும், மாற்றுத்திறனாளிகள் இல்லத்தில் தங்கிப் பணியாற்றி வந்தார். 

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.