2017-03-01 15:24:00

"தவக்காலம், ஒரு புதிய ஆரம்பம்" – திருத்தந்தையின் டுவிட்டர்


மார்ச்,01,2017. "தவக்காலம், ஒரு புதிய ஆரம்பம்; சாவின் மீது கிறிஸ்து கொண்ட வெற்றியான உயிர்ப்பு என்ற இலக்கை நோக்கி அழைத்துச் செல்லும் ஒரு பாதை" என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தவக்காலத்தின் முதல்நாளான திருநீற்றுப் புதனன்று, தன் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டார்.

மேலும், மார்ச் 1 சிறப்பிக்கப்பட்ட திருநீற்று புதனையொட்டி, மாலை 4.30 மணிக்கு, உரோம் நகரில் உள்ள புனித ஆன்செல்ம் கோவிலிலிருந்து புறப்படும் தவ ஊர்வலத்தை திருத்தந்தை முன்னின்று நடத்துகிறார்.

இவ்வூர்வலத்தின் இறுதியில், புனித சபீனா பசிலிக்காவில் திருப்பலியை தலைமையேற்று நடத்தும் திருத்தந்தை, சாம்பலை அர்ச்சித்து, மக்களுக்கு வழங்குகிறார்.

மார்ச் 5, இஞ்ஞாயிறு மாலை முதல், மார்ச் 10 வெள்ளி முடிய திருத்தந்தையும், திருப்பீட துறைகளைச் சார்ந்த உயர் அதிகாரிகள் அனைவரும், உரோம் நகருக்கு அருகே உள்ள அரிச்சா எனுமிடத்தில் அமைந்துள்ள தெய்வீகப் போதகர் இல்லத்தில் தங்கள் ஆண்டு தியானத்தை மேற்கொள்கின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.