2017-02-28 15:40:00

ஐரோப்பாவை அடைய ஆபத்துக்களை எதிர்கொள்ளும் புலம்பெயர்வோர்


பிப்.28,2017. எல்லைக் கட்டுப்பாடுகள் அதிகரித்திருப்பது, சட்ட ரீதியாக நுழையும் வழிகள் இல்லாமை ஆகிய காரணங்களால், ஐரோப்பாவுக்குள் நுழைய வரும் புலம்பெயர்வோரும், குடிபெயர்வோரும், பல்வேறு ஆபத்தான பயணங்களை மேற்கொள்கின்றனர் என்று, UNHCR என்ற ஐ.நா. புலம்பெயர்ந்தோர் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

மனித வர்த்தகர்கள் அல்லது, உறுதியற்ற படகுகளைப் பயன்படுத்தி, சீற்றம் நிறைந்த கடல்களில் புலம்பெயர்வோர் பயணம் மேற்கொள்கின்றனர் என்றும், 2017ம் ஆண்டின் முதல் 53 நாள்களில், மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பாவுக்கு வந்த இம்மக்களில் 366 பேர் இறந்துள்ளனர் என்றும் அவ்வறிக்கை மேலும் கூறுகிறது.

2016ம் ஆண்டில், இத்தாலிக்கு வந்துள்ள 1,81,436 பேருக்கு, உலகளாவிய பாதுகாப்பு தேவைப்படுகின்றது என்றும், இவர்களில் 90 விழுக்காட்டினர் லிபியாவிலிருந்து படகு வழியாக வந்தவர்கள் என்றும், UNHCR நிறுவன அறிக்கை கூறுகிறது.

இன்னும், ஆப்ரிக்காவிலிருந்து லிபியா வழியாக, இத்தாலிக்கு ஆபத்தான பயணம் மேற்கொள்ளும், அதிக எண்ணிக்கையிலான சிறார், கடத்தல்காரர்கள் மற்றும் அதிகாரிகளின், வன்முறை மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் எனவும் ஐ.நா.வின் யுனிசெப் நிறுவனம் எச்சரித்துள்ளது.

கடந்த ஆண்டு, யாருடைய துணையுமின்றி ஏறக்குறைய 26,000 சிறார் மத்திய தரைக் கடலைக் கடந்தனர் என்றும், இவ்வெண்ணிக்கை, 2015ம் ஆண்டைவிட இருமடங்காகும் என்றும், யுனிசெஃப் தெரிவிக்கிறது.

எல்லைகளில், சட்டவிரோத கைது, பாலியல் வன்முறை, ஈவு இரக்கமற்ற துன்புறுத்தல் ஆகியவற்றிற்கு சிறார் எவ்வாறு ஆளாகின்றனர் என அந்நிறுவனம் விவரித்துள்ளது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.