2017-02-28 15:59:00

உண்மையான கிறிஸ்தவர் மகிழ்வான முகங்களைக் கொண்டிருப்பர்


பிப்.28,2017. தவக்காலத்தில் நாம் நுழையவிருக்கும் இவ்வேளையில், கடவுளுக்கும் பணத்திற்கும் இடையே இருக்கும் உறவு குறித்து சிந்திக்குமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாய் காலை திருப்பலியில் விசுவாசிகளிடம் கூறினார்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இச்செவ்வாய் காலை நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை, இயேசுவைப் பின்செல்ல விரும்பிய பணக்கார இளைஞர் ஒருவர், தன்னிடம் இருந்த செல்வத்தால் பின்பற்ற முடியாமல் போனது பற்றிக் குறிப்பிட்டு, ஒருவர் இரண்டு முதலாளிகளுக்கு அதாவது, கடவுளுக்கும், செல்வத்திற்கும் ஒரே நேரத்தில் ஊழியம் செய்ய முடியாது என்று கூறினார்.

தம் சொற்கள் சீடர்களைக் கவலைக்குள்ளாக்கியது பற்றி அறிந்த இயேசு, செல்வந்தர் விண்ணரசில் நுழைவதைவிட, ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது என்று கூறினார் என்றார் திருத்தந்தை.

இயேசுவைப் பின்பற்றியதால் கிடைக்கும் நலன்கள் பற்றிக் கூறும், இச்செவ்வாய்க் கிழமை திருப்பலியின் நற்செய்தி வாசகத்தை மையப்படுத்தி மறையுரையாற்றிய திருத்தந்தை, கடவுள் நமக்கு வழங்கும் கொடை முழுமையானது, அந்த முழுமை, கல்வாரியில் சிலுவையில் உச்சத்தை எட்டுகின்றது என்று கூறினார்.

பாரும், நாங்கள் எல்லவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே என்று பேதுரு கேட்ட கேள்விக்கு இயேசு அளித்த பதில் பற்றி விளக்கியத்  திருத்தந்தை, எல்லாவற்றையும் விட்டுவிடும் எவரும், எல்லாவற்றையும் பெறாமல் போகார் என்றும், நம் ஆண்டவர், எதையும் கொடுக்கும்போது குறைவாகக் கொடுப்பதற்குத் திறனற்றவர், அவர், நமக்கு ஏதாவது கொடுக்கும்போது, தம்மையே முழுமையாகக் கொடுக்கிறார் என்றும் கூறினார்.

இயேசுவுக்காக எல்லாவற்றையும் விட்டுவிட்ட எவரும், இவ்வுலகில், நூறு மடங்காக, வீடுகள், நிலபுலன்கள், சகோதர சகோதரிகள், இவற்றோடுகூட இன்னல்களையும் பெறுவர் என்ற நற்செய்தி திருச்சொற்களையும் குறிப்பிட்ட திருத்தந்தை, இறைவனின் கொடை சிலுவையில் முழுமையடைகின்றது என்றும் தெரிவித்தார்.      

கடவுளின் முழுமை, சிலுவையில் அவர் தம்மையே முழுமையாய் வெறுமையாக்கியதில் தெரிகின்றது எனவும், தன் மறையுரையில் கூறியத் திருத்தந்தை, மகிழ்வான முகம், மகிழ்வால் நிறைந்த கண்கள் ஆகியவையே கிறிஸ்துவை முழுமையாய் பின்பற்றுகிறவரின் அடையாளங்கள் என்றும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.