2017-02-28 16:13:00

இப்பூமியைப் பாதுகாப்பதற்கு உறுதி எடுக்குமாறு வலியுறுத்தல்


பிப்.28,2017. சுற்றுச்சூழல் அழிவு என்ற மிக மோசமான ஒரு நிலையை இக்காலத்தில் நாம் எதிர்கொண்டுவரும்வேளை, இப்பூமியைப் பாதுகாப்பதற்கு உறுதி எடுக்குமாறு, மியான்மார் மக்களைக் கேட்டுக்கொண்டார், அந்நாட்டு தலத்திருஅவை தலைவர்.

ஆசிய-ஓசியானியப் பகுதி அருள்சகோதரிகள் அவையினர் யாங்கூனில் நடத்திவரும் கூட்டத்தில் உரையாற்றிய, யாங்கூன் பேராயர், கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குறிப்பிட்டு வரும், சுற்றுச்சூழலுக்கு எதிரான பாவம் உட்பட, நவீன காலப் பாவங்கள் பற்றிச் சுட்டிக்காட்டினார்.

மனிதரின் பேராசை, தாய் பூமிக்கு எதிராக, சுற்றுச்சூழல் பயங்கரவாதத்தை எரியவிட்டுள்ளது என்றும், காலநிலை மாற்றம் இப்பூமியை அதிக வெப்பமடையச் செய்கின்றது என்றும், இது, ஆயிரக்கணக்கான சுற்றுச்சூழல் அகதிகளை உருவாக்கியுள்ளது என்றும் கூறினார் கர்தினால் போ.

உலகில் ஐம்பது விழுக்காடு செல்வத்தை, ஒரு விழுக்காடு மக்கள் கொண்டிருக்கின்றனர் எனவும், உலகின் ஆறு விழுக்காட்டு மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் அமெரிக்க ஐக்கிய நாடு, பசுமை இல்லத்தை மாசுபடுத்தும் வாயுவில், நாற்பது விழுக்காட்டிற்குக் காரணமாகின்றது எனவும் தெரிவித்தார் கர்தினால் போ.

தவக்காலத்தை ஆரம்பிக்கும் நாம், கடவுளின் படைப்பை மாசுபடுத்துவதற்கு மனம் வருந்தி, நம் வாழ்வுப் பாதையை மாற்றி, இப்பூமியைப் பாதுகாப்போம் எனக் கேட்டுக்கொண்டார், மியான்மார் கர்தினால் போ.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.