2017-02-27 16:57:00

முழு ஒன்றிப்பை நோக்கிய பாதையின் துவக்கம், தாழ்ச்சியே


பிப்.,27,2017. கத்தோலிக்கருக்கும் ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபையினருக்கும் இடையே நிலவி வரும் நல் உறவுகளுக்காக நன்றி தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முழு ஒன்றிப்பை நோக்கிய பாதையை தாழ்ச்சியிலிருந்து துவக்கவேண்டும் என்றார்.

இஞ்ஞாயிறன்று, உரோம் நகரின் ஆங்கிலிக்கன் கோவிலைச் சந்திக்கச் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தாழ்ச்சி என்பது ஓர் அழகான சிறப்புக் குணம் மட்டுமல்ல, நம் தனித்துவத்தை வெளிப்படுத்தும் ஒன்று என்றார்.

இயேசுவே நம் ஆண்டவர் என அறிவிக்கும் பணியை ஆற்றிய தூய பவுல் அவர்கள், தன் பலத்தை நம்பியல்ல, மாறாக, தன் பலவீனத்தை இறைவன் தன் இரக்கத்தின் வழியாக பலமாக்குகிறார் என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டார் என்றார் திருத்தந்தை.

உரோம் நகரில் ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபை நிறுவப்பட்டதன் 200ம் ஆண்டு சிறப்பிக்கப்படுவதை முன்னிட்டு, உரோம் நகரின் அனைத்து புனிதர்கள் ஆங்கிலிக்கன் கோவிலில் இடம்பெற்ற கொண்டாட்டத்தில், இஞ்ஞாயிறன்று கலந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விசுவாசிகளின் மூன்று கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

இன்றைய சூழலில் கத்தோலிக்கர்களுக்கும், ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபையினருக்கும் இடையேயான உறவு, கிறிஸ்தவ ஒன்றிப்பு முயற்சிகளில் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்டுக்கும் தனக்கும் இடையேயான அணுகுமுறை வேறுபாடுகள், ஆப்ரிக்கா மற்றும் ஆசிய கிறிஸ்தவ சபைகளிடமிருந்து கிறிஸ்தவ சபைகள் கற்றுக்கொள்வது போன்றவை குறித்த கேள்விகளுக்கு, பதிலளிக்கும் வகையில், தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார், திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.