2017-02-24 14:55:00

பாசமுள்ள பார்வையில்..: நினைவுகள் என்றும் நிலையானவை, சுகமானவை


அந்த ஏழு வயது சிறுவன், அந்த சந்தையில் எதை வாங்க இவ்வளவு அவசரமாகச் செல்கிறான் என அவனை ஆச்சரியமாகப் பார்த்தேன். ஒவ்வொரு கடையாக வெளியில் நின்று பார்த்துக் கொண்டேச் சென்றவன், மீண்டும் அதே வழியில் திரும்பி வந்தான். அவன் தேடியது கிடைக்கவில்லை போலும். அவனை நிறுத்திக் கேட்டேன், 'என்ன தம்பி என்ன வாங்க வந்தாய்?' என்று. 'பனம்பழம் வாங்க வந்தேன்' என்றான். 'யாருக்காக பனம்பழம் வாங்க வந்தாய்' என்று கேட்க, 'என் அம்மாவுக்கு', என்றான் அவன். அந்த சந்தையில் பனம்பழம் விற்பனைக்கு வராது என்ற உண்மையை அவனிடம் சொல்லாமல், பக்கத்திலிருந்த என் வீட்டிற்கு அழைத்துச் சென்று என் வீட்டிலிருந்த ஒரு பனம்பழத்தைக் கொடுத்தேன். ஆசையாய் வாங்கிக்கொண்ட அவன், கண்களில் ஆவலுடன் நின்றான். 'உனக்கு பனம்பழம் பிடிக்குமா? இதை நீ சாப்பிட்டுவிட்டு, அதை அம்மாவுக்குக் கொடு' என இன்னொன்றை நீட்டினேன். 'எனக்கும் பனம்பழம் ரொம்பப் பிடிக்கும். இதை நான் அம்மாவுக்குக் கொடுத்தனுப்பப் போகிறேன்' என்றான் சிறுவன். 'கொடுத்தனுப்பப் போகிறாயா? அம்மா இங்கு உன்னோடு இல்லையா?' எனக் கேட்டபோது அவன் சொன்னான், 'இல்லை அங்கிள், போன வாரம் வயல் வேலைக்குப் போய்விட்டு அம்மாவும் அப்பாவும் சாலையோரமாக திரும்பி வந்து கொண்டிருந்தபோது, ஒரு லாரி மோதி அம்மா இறந்து விட்டார்கள். அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட அப்பா, நேற்றிரவுதான் இறந்து போனார். அப்பாவின் பெட்டியில் இந்த பழத்தை வைத்து அனுப்பினால் அம்மாவை அப்பா சந்திக்கும்போது இதைக் கொடுப்பாரல்லவா அதுதான் பனம்பழம் வாங்க வந்தேன்' என்றான் சிறுவன். பக்கத்து ஊரிலிருந்து வந்திருந்த அந்த சிறுவனின் முகவரியை வாங்கிக் கொண்டு அவனை அனுப்பி வைத்தேன். கண்கள் குளமாக, அவன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு மணி நேரத்தில் நான் அங்குச் சென்றபோது, தந்தையின் உடல் பெட்டியில் வைக்கப்பட்டிருக்க, அச்சிறுவனை அவன் பாட்டி அணைத்தவாறு அழுது கொண்டிருந்தார்கள். கிடத்தப்பட்டிருந்த தந்தையின் உடலைப் பார்த்தேன். அவர் கையருகே இரண்டு பனம்பழங்கள் வைக்கப்படிருந்தன.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.