2017-02-24 16:12:00

இலங்கை போர்க் குற்றம் தொடர்பாக ஐ.நா.வுக்கு விண்ணப்பம்


பிப்.24,2017. இலங்கையில் போர்க்காலக் குற்றங்கள் குறித்த விசாரணை இடம்பெறுவதற்கு, ஐக்கிய நாடுகள் நிறுவனம், அரசுக்கு, அழுத்தம் கொடுக்க வேண்டுமென்று, அந்நாட்டுத் தமிழ் மக்கள் கூறியுள்ளனர்.

இலங்கையில் இடம்பெற்ற போரில் காணாமல்போன தங்களின் உறவினர்கள் குறித்த விபரங்களை வெளியிடுமாறு, தமிழ் மக்கள், இம்மாதம் 20ம் தேதியிலிருந்து கிளிநொச்சியில் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

மேலும், இவ்விவகாரம் குறித்த மனு ஒன்றையும், இம்மக்கள், ஐ.நா. மனித உரிமைகள் அவைக்குச் சமர்ப்பித்துள்ளனர்.

ஐ.நா. மனித உரிமைகள் அவையின் 34வது கூட்டம், இம்மாதம் 27ம் தேதியிலிருந்து, மார்ச் 24ம் தேதி வரை, ஜெனீவாவில் நடைபெறவுள்ளதையொட்டி, இம்மனு அந்த அவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கை இராணுவத்தினரால் ஆக்ரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் சொந்த நிலங்கள்,  அவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும் என, அந்நாட்டின் மனித உரிமை ஆர்வலர்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இலங்கை நாடாளுமன்றத்தில், இவ்வியாழனன்று நடைபெற்ற நிலக்கொள்முதல்  விதிமுறைகள் தொடர்பான விவாதத்திலும், இந்த ஆதரவுக் குரல்கள் உரக்க ஒலித்தன என, ஊடகச் செய்திகள் கூறுகின்றன. 

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.