2017-02-21 14:48:00

பேராசைகள், பாவச் சங்கிலித் தொடரையே கொணர்கின்றன‌


பிப்.21,2017. உயர் பதவிகளை நாடும் ஆசைகள் குறித்த சோதனையிலிருந்து வெளியேறும் அருளை, இறைவன் நமக்கு வழங்குவாராக என இச்செவ்வாயன்று சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசு, தம் மரணம் குறித்து அறிவித்ததையும், யார் பெரியவர் என வழியில் சீடர்கள் வாதிட்டுக்கொண்டு வந்தது குறித்தும் பேசும் இந்நாளைய நற்செய்தி வாசகத்தை மையப்படுத்தி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெரிய பதவிகளை அடைய, பங்குத்தள மக்களிடையேயும், நல்ல பங்குத்தளங்களின் நிர்வாகத்தைப் பெற, அருள்பணியாளர்களிடையேயும், ஏன் ஆயர்களிடையேயும் புறம்பேசும் சோதனைகள் உள்ளன, இத்தகையப் போக்குகள் உலகாயுதப் பாதையிலேயே நம்மை வழி நடத்திச் செல்லும் எனவும் கூறினார்.

உலகாயுதப்போக்குகளில் நாம் ஆசைகொண்டு, அதற்காக முயலும்போது, பாவத்தையே அது சங்கிலித் தொடராகக் கொண்டிருக்கும் எனவும், உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள் என எண்ணும் உலகப்போக்கிலிருந்து நம்மைக் காப்பாற்றவும், குழந்தைகளுக்குரிய எளிய மனதை நமக்கு வழங்கவும், சேவையின் பாதையை நாம் உணர்ந்து கொள்ளவும், இறைவனின் அருளை வேண்டுவோம் என, தன் மறையுரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

 








All the contents on this site are copyrighted ©.