2017-02-18 15:17:00

வெப்பநிலை உயர்வு ஆர்டிக் கடலின் பனிப் பகுதியை குறைத்து..


பிப்.18,2017. உலகின் வட துருவத்திலுள்ள ஆர்டிக் பகுதியில், தற்போது குளிர்காலமாக இருக்கின்றபோதிலும், இவ்வாண்டு சனவரியில், வெப்பக்காற்று வீசியதால், கடலில் பனிக்கட்டிகள் அதிகளவு உருகியுள்ளதாக, ஐ.நா.வின் காலநிலை ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.

ஆர்டிக் பகுதியில், வெப்பநிலை குறிப்பிடத்தக்க வகையில் உயர்ந்துள்ளது, உலகிற்கு அச்சுறுத்தலாக உள்ளது எனக் கூறும் ஐ.நா. நிறுவனங்கள், கடந்த 38 ஆண்டுகளில், இவ்வாண்டு சனவரியில், ஆர்டிக் கடலின் பனிப் பகுதி மிகவும் குறைவாக இருந்தது எனத் தெரிவிக்கின்றன.

இவ்வாண்டு சனவரியில், ஆர்டிக் கடலின் பனிப் பகுதி, ஒரு கோடியே 33 இலட்சத்து 8 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவாக இருந்தது எனவும், இது, 2016ம் ஆண்டு சனவரியில் இருந்த அளவைவிட 2,60,000 சதுர கிலோ மீட்டர் குறைவு எனவும் ஐ.நா. நிறுவனங்கள் கூறுகின்றன.

ஆர்டிக் பகுதியில் தற்போது தட்பவெட்பம் 20 டிகிரி சென்டிகிரேடாக உள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகம். பனிப்பகுதியில் தற்போது அதிக அளவில் தாவரங்கள் வளர்ச்சி காணப்படுகிறது. இதனால் பனி குறைவதுடன் அதிக அளவில் வெப்பம் உறிஞ்சப்படவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தாவரங்களில் இருந்து வெளியாகும் பசுமை இல்ல வாயுவால் ஆர்டிக் பகுதி வெப்பம் அடைந்து வருகிறது. இதனால் உலகம் முழுவதும் கடலின் பருவமுறைகளிலும் பாதகமான விளைவுகள் ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.