2017-02-16 15:03:00

பாசமுள்ள பார்வையில்..அம்மாவைவிட்டுப் பிரிய யாருக்குத்தான்..


ஒரு சமயம், ஒரு சிறுமி, வானம்பாடி தாய்ப் பறவையிடம் சென்று, உங்களுக்கு சிறு குழந்தைகள் உள்ளனரா? என்று கேட்டார். அதற்கு அப்பறவை, இருக்கிறார்கள், உண்மையிலே அவர்கள் மிகவும் அழகானவர்கள் என்றது. பின்னர், தன் மூன்று குழந்தைகளையும் சுட்டிக்காட்டி, இந்த முதல் குழந்தைக்கு, மின்னும் இறக்கைகள், இரண்டாவது குழந்தைக்கு மிக மிகச் சிறிய அலகு, மூன்றாவது குழந்தைக்கு சுடர்விடும் கண்கள் என்றும் வர்ணித்தது தாய்ப் பறவை. அப்போது அச்சிறுமி, எங்கள் வீட்டில், நாங்கள் மூவர். எனக்கு இரு சகோதரிகள் உள்ளனர், நாங்கள் மிகவும் அழகானவர்கள் என்று எங்கள் அம்மா சொல்வார்கள், எங்கள் மீது மிகவும் அன்பு வைத்திருக்கின்றார்கள் என்றார். உடனே, அந்தப் பறவைக் குஞ்சுகளும், எங்கள் அம்மாவும் எங்கள் மீது மிகவும் அன்பு வைத்திருக்கின்றார் என்றன. அப்போது அச்சிறுமி, தாய்ப் பறவையிடம், சிறிய அலகு கொண்ட உங்கள் குழந்தை, இன்று, எங்கள் வீட்டிற்கு வந்து விளையாடுவதற்கு என்னோடு அதை அனுப்புவீர்களா? என்று கேட்டது. தாய்ப் பறவை பதில் சொல்வதற்கு முன்னதாகவே, சுடர்விடும் கண்கள் கொண்ட பறவைக் குஞ்சு அச்சிறுமியிடம், உங்களின் சிறிய சகோதரியை, எங்களது கூட்டில் விளையாடுவதற்கு அனுப்பினால், நாங்களும் அனுப்புகிறோம் என்று சொன்னது. அதற்கு சிறுமி, என் சகோதரி, எங்கள் அம்மாவைப் பிரிந்து இருக்கமாட்டாள் என்றார். சிறிய அலகு கொண்ட எங்கள் உடன்பிறப்பும், எங்கள் அம்மாவைப் பிரிந்து இருக்காது என்றது, சுடர்விடும் கண்கள் கொண்ட குஞ்சுப் பறவை. பின்னர் தன் வீட்டுக்குச் சென்ற அச்சிறுமி, தன் அம்மாவிடம், அம்மா, ஒவ்வொருவரும், அவரவர் அம்மாவைவிட்டுப் பிரியமாட்டேன் என்று சொல்கிறார்கள் எனக் கூறினார். 

ஆம். அம்மாவை, அன்பு இவளென்பர், இயற்கைக் கொடை என்பர், இறைவன் அருளென்பர், பாசப்பேழை என்பர், தியாகச் சுடரென்பர், பேசும் தெய்வமென்பர், இரக்கம் இவளென்பர்.... அத்தனை புகழுக்கும் உரிய அம்மாவைவிட்டுப் பிரிய யாருக்குத்தான் மனம் வரும்?

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.