2017-02-11 14:17:00

பொதுக்காலம் 6ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


தொடர்ந்து, மூன்றாவது வாரமாக, மலைப்பொழிவின் வழியே, இயேசு சொல்லித்தரும் பாடங்களைக் கற்றுக்கொள்ள வந்திருக்கிறோம். சென்ற வாரம், இயேசு கூறிய உப்பும், விளக்கும் என்ற இரு உருவகங்களைச் சிந்தித்தோம். இந்த வாரம், நமது சிந்தனைகளை, நீரும், நெருப்பும் என்ற, வேறு இரு உருவகங்களுடன் ஆரம்பிப்போம். சீராக்கின் ஞானம் என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ள இன்றைய முதல் வாசகம், இவ்வுருவகங்களை தருவதோடு, எளிய வார்த்தைகளில், அழகான, ஆழமான வாழ்க்கைப் பாடங்களையும் நமக்கு உணர்த்துகின்றது. இவ்வாசகத்தின் அறிமுகப் பகுதி இதோ...

சீராக்கின் ஞானம் 15: 15-17

நீ விரும்பினால் கட்டளைகளைக் கடைப்பிடி; பற்றுறுதியுடன் நடப்பது உனது விருப்பத்தைப் பொருத்தது. உனக்குமுன் நீரையும் நெருப்பையும் அவர் வைத்துள்ளார்; உன் கையை நீட்டி, உனக்கு விருப்பமானதை எடுத்துக்கொள். மனிதர்முன், வாழ்வும், சாவும், வைக்கப்பட்டுள்ளன. எதை அவர்கள் விரும்புகிறார்களோ, அதுவே அவர்களுக்குக் கொடுக்கப்படும்.

நீரா, நெருப்பா... எதை கைநீட்டி எடுப்பது? வாழ்வா, சாவா... எதை விரும்புவது? என்ற கேள்விகளுக்கு, அறிவுப்பூர்வமாக, எளிதில், பதில் சொல்லிவிடலாம். நெருப்பை எடுப்பதை விட, நீரை எடுப்பதே மேல் என்றும், சாவை விரும்புவதை விட, வாழ்வை விரும்புவதே மேல் என்றும், நம் அறிவு எளிதில் சொல்லிவிடும். ஆனால், வாழ்வில், அறிவு மட்டுமே நம்மை வழிநடத்துகிறதா? இல்லையே! உறவுகள், உணர்வுகள், பல்வேறு பழக்கங்கள் என்று, வேறு பல சக்திகளும் நம்மை வழிநடத்துகின்றனவே. இந்த சக்திகளால் வழிநடத்தப்பட்டு, நாம் நெருப்பைத் தேடிச்சென்ற நேரங்களை, நெருப்பை கைநீட்டி எடுத்த நேரங்களை, நினைத்துப் பார்க்கலாம்.

கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு, பார்க்க அழகாக இருக்கும். அந்த அழகினால் ஈர்க்கப்பட்டு, குழந்தை ஒன்று, நெருப்பை நோக்கி, தவழ்ந்து செல்லும்போது, அதைத் தடுக்கிறோம். குழந்தை எவ்வளவுதான் அடம் பிடித்து அழுதாலும், நெருப்பின் அருகே குழந்தை செல்வதை நாம் அனுமதிப்பதில்லை. ஆனால், நெருப்பையொத்த எத்தனை விபரீத ஆசைகள் நம்மை ஈர்த்துள்ளன? எத்தனை முறை, நாம், அந்த ஈர்ப்பினால், நெருப்புடன் விளையாடி, புண்பட்டிருக்கிறோம்? நம் வாழ்வின் எத்தனைப் பகுதிகளை, அந்த நெருப்பு விளையாட்டில், சாம்பலாக்கியிருக்கிறோம்?

இயற்கையில், நீர், நெருப்பு இரண்டும் நல்லவையே. ஆனால், அவற்றை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதைப் பொருத்து, நன்மையோ, தீமையோ விளையலாம். நெருப்பும், நீரும் நமக்கு முன் இருக்கும்போது, கைநீட்டி எடுத்துக்கொள்ள, நீரே நல்லது, நெருப்போடு விளையாடுவது ஆபத்து என்ற எச்சரிக்கையை, அனைவரும் உணர்கிறோம். இருப்பினும், நெருப்போடு விளையாடும் பலரை நாம் பார்த்திருக்கிறோம். இளமை வேகத்தில் நெருப்புடன் விளையாடத் துடிக்கும் இளையோரை, இவ்வேளையில் நினைத்துப் பார்ப்போம். அவர்கள், தங்கள் விபரீத விளையாட்டுகளை விட்டு விலகி, நல்வழி வந்து சேர வேண்டும் என மன்றாடுவோம்.

சீராக்கின் ஞானம் எழுப்பும் மற்றொரு கேள்வி - வாழ்வா, சாவா... எதை விரும்புவது? அறிவுப்பூர்வமாய்ச் சிந்தித்தால், இதுவும் மிக எளிதான கேள்விதான். சாவை எப்படி விரும்பமுடியும்? வாழ்வைத்தான் விரும்பவேண்டும் என்று, எளிதில் பதில் சொல்லிவிடலாம். சீராக் கூறும் வாழ்வு, சாவு இவை குறித்து, Walter Burghardt என்ற இயேசுசபை அருள்பணியாளர் கூறும் விளக்கம், இந்தக் கேள்வியை, இன்னும் சிறிது ஆழமாய் ஆய்வுசெய்ய அழைக்கின்றது.

சீராக் கூறும் வாழ்வு, மூச்சு விடுதல், இதயம் துடித்தல் போன்ற, வெறும் உடல் சார்ந்த செயல்களை மட்டும் கருத்தில் கொண்டு சொல்லப்பட்டது அல்ல. சீராக்கைப் பொருத்தவரை, இறைவன் மீது பற்றுகொண்டு, அவர் வழி நடப்பதே வாழ்வு. அதேபோல், அவர் கூறும் சாவு, நமது மூச்சு நின்று போகும்போது நிகழும் சாவு அல்ல. மூச்சு இருக்கும்போதே, மனிதர்களால் சாகமுடியும். இறைவாக்கினர்களைப் பொருத்தவரை, இறைவனின் வழியில் நடக்காத மனிதர்கள் மூச்சுவிடும் நடைப்பிணங்களே. எனவே, இறைவாக்கினர் சீராக், வாழ்வையும், சாவையும் நம்முன் வைக்கும்போது, இறைவனின் வழி நாம் வாழ்கிறோமா என்ற கேள்வியை நம்முன் வைக்கிறார். இதுவே, அருள்பணி Walter Burghardt அவர்கள் தரும் விளக்கம்.

இறைவனின் வழி வாழ்வது என்பதை, இறை சட்டங்களின்படி, அதாவது, மோசே தந்த சட்டங்களின்படி வாழ்வது என்ற அளவில் நினைத்துப் பார்த்தனர், இஸ்ரயேல் மதத்தலைவர்கள். அத்துடன், மோசே தந்த சட்டங்களையும், தங்கள் வசதிக்கேற்ப அவரகள் வளைத்துக்கொள்ள முயன்றனர். எனவே, சுயநலக் கணக்குகளோடு சட்டங்களைப் பின்பற்றி, அவர்கள் வாழ்ந்த வாழ்வு, வெறும் மூச்சுவிடும் நடைப்பிணங்களின் வாழ்வு என்பதை, இயேசு, தன் மலைப்பொழிவில் மட்டுமல்ல, தன் வாழ்நாள் முழுவதும் தெளிவுப்படுத்தினார்.

"முன்னோர் கூறிய சட்டங்களைக் கேட்டிருக்கிறீர்கள்.... ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்று, இன்றைய நற்செய்தியில் பலமுறை கூறி, சட்டத்தையும் தாண்டிய ஒரு மேலான வாழ்வுக்கு அழைப்பு விடுக்கிறார், இயேசு. "நான் உங்களுக்குச் சொல்கிறேன்..." என்று இயேசு, மீண்டும், மீண்டும், கூறிய இந்த வார்த்தைகள், இஸ்ரயேல் மக்களுக்கு அதிர்ச்சியைத் தந்திருக்கும். ஏதோ ஒரு சிற்றூரிலிருந்து, வந்த ஒரு தச்சனின் மகன், மோசே தந்த சட்டங்களை மாற்ற முயல்கிறாரே என்று, கேள்விகள் எழுந்திருக்கலாம். கோபம் கொழுந்துவிட்டு எரிந்திருக்கலாம்.

அதனால், இன்றைய நற்செய்தியின் துவக்கத்தில், இயேசு, தன் நிலையைத் தெளிவுபடுத்துகிறார். சட்டங்களை அழிக்க தான் வரவில்லை; அவற்றை நிறைவேற்றவே வந்துள்ளேன் என்று கூறுகிறார். சட்டங்களை வெறும் சடங்காக, சம்பிரதாயமாக, ஏனோதானோவென்று பின்பற்றாமல், அச்சட்டங்களின் பின்னணியில் உள்ள ஆத்மாவை, அர்த்தத்தைக் கண்டுபிடித்து, அதைப் பின்பற்ற வேண்டும் என்பதை, இயேசு தெளிவுபடுத்துகிறார். மோசே கூறிய சட்டங்களை, இன்னும் ஒரு படி மேலே எடுத்துச் செல்கிறார் இயேசு.

இயேசு கொணர்ந்த இந்த மாற்றத்தை, ஓர் எடுத்துக்காட்டின் உதவிகொண்டு, நாம் உணர முயல்வோம். கோவிலில் காணிக்கை செலுத்துவதுபற்றி மோசே தந்த சட்டங்களை, இயேசு எவ்விதம் மாற்றி சிந்தித்துள்ளார் என்பதை, இன்றைய நற்செய்தி நமக்குச் சொல்கிறது.

மோசே தந்த காணிக்கைச்சட்டங்கள், கோவிலுக்குக் கொண்டுவரப்படும் காணிக்கை போருள்களைப் பற்றியே அதிகம் பேசின. காணிக்கையாகக் கொண்டுவரப்படும் ஆட்டுக்குட்டிகள், புறாக்கள், காய்கறிகள், பழவகைகள் ஆகியவை, எவ்விதம் இருக்கவேண்டும் என்பதை, மோசேயின் சட்டங்கள் வலியுறுத்தின. இயேசு ஒருபடி மேலே செல்கிறார். வெளிப்புறமாக நம் கைகளில் ஏந்திவரும் காணிக்கைகள் ஒருபுறம் இருக்கட்டும். காணிக்கை செலுத்தவந்த நம் உள்புறம் எவ்விதம் உள்ளது என்ற கேள்வியை இயேசு எழுப்புகிறார்.

நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலிபீடத்தின் முன் உங்கள் காணிக்கையை வைத்துவிட்டு, போய், முதலில், அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள். (மத். 5: 23-24)

காணிக்கை செலுத்தும் நேரத்தில், ஒருவருக்கு, தன் உறவுகள் சரியில்லை என்ற நெருடல் எழுகிறது.. உறவுகள் சரியில்லாமல் போனதற்கு யார் காரணம்? நாம் காரணமா? பிறர் காரணமா? என்ற கேள்வியும் எழுகிறது. "காணிக்கை செலுத்த வரும்போது, நீங்கள் உன் சகோதரர், சகோதரிகள் மீது மனத்தாங்கல் கொண்டிருந்தால்..." என்று இயேசு சொல்லவில்லை. மாறாக, அவர் தரும் சவால், இன்னும் தீவிரமானதாய் உள்ளது. பீடத்திற்கு முன் நீங்கள் நிற்கும்போது, உங்கள் சகோதரர், சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால்... என்று இயேசு கூறியுள்ளார். அவர் தெளிவுபடுத்த விரும்புவது இதுதான்... சகோதர, சகோதரிகள் நடுவே உருவாகும் மனத்தாங்கலுக்கு நாம் காரணமாக இல்லாமல், அடுத்தவர் காரணமாக இருந்தாலும், அதை உணர்ந்த உடனேயே, நமது காணிக்கைச் சடங்குகளை நிறுத்திவிட்டு, முதலில் அவர்களுடன் நல்லுறவை உருவாக்க நாம் செல்ல வேண்டும். காணிக்கைகள் காத்திருக்கலாம் என்று சொல்கிறார்.

சரி... பிறர் நம்மீது மனத்தாங்கல் கொண்டிருப்பதற்கு பதில், நாம் அவர்கள் மீது மனத்தாங்கல் கொண்டிருப்பதாக உணர்ந்தால், என்ன செய்வது? இக்கேள்விக்கு, இயேசுவின் பதில் எப்படி இருந்திருக்கும் என்று எளிதில் கற்பனை செய்துகொள்ளலாம். உன் சகோதரர், சகோதரிகள் மீது நீ மனத்தாங்கல் கொண்டிருந்தால், காணிக்கை செலுத்துவதைப் பற்றியே சிந்திக்க வேண்டாம். முதலில் நல்லுறவை உருவாக்க முயற்சி செய். பின்னர், உனது காணிக்கையைப் பற்றி சிந்திக்கலாம் என்று திட்டவட்டமாகச் சொல்லியிருப்பார் இயேசு.

காணிக்கை செலுத்துவதற்கு முன் பிறருடன் நல்லுறவு கொள்ள வேண்டும் என்ற இயேசுவின் இந்த ஒரு கூற்றை மட்டும் முழுமையாகக் கடைபிடிக்க வேண்டும் என்று நாம் விழைந்தால், நமது ஞாயிறுத் திருப்பலியை இப்போதே நிறுத்த வேண்டியிருக்கும். நீங்களும், நானும், ஏதோ ஒரு வகையில் மனத்தாங்கல்களைச் சுமந்து இப்போது வந்திருக்கிறோம். நமது காணிக்கையைச் செலுத்தும் முன், பிறருடன் ஒப்புரவு பெற வேண்டும். சரி, அது இப்போது முடியாத பட்சத்தில், அதற்கடுத்த நிலையையாவது நாம் தேடவேண்டும்... அதாவது, நமது மனத்தாங்கலைத் தீர்க்கும் ஓர் ஆவலை நாம் பெறுவதற்கு, ஒரு நல்லுறவு முயற்சியை நாம் எடுப்பதற்கு, இறைவன் இன்று நமக்கு அருள் தரவேண்டும் என்று செபிப்போம்.

காணிக்கைச் சட்டங்களைப் போலவே, அடுத்தவர் மீது தொடுக்கப்படும் வழக்குகள், பெண்களை மாண்புடன் நடத்தும் முறை, மணவிலக்கு, பொய்யாணை என்று பல விடயங்களில், மோசே தந்த சட்டங்களைத் தாண்டி, உன்னத வழியைப் பின்பற்றவேண்டும் என்று, இயேசு சவால்களை விடுத்துள்ளார். இன்றைய நற்செய்தி முழுவதும், இயேசு எடுத்துக்காட்டும் பல சட்டங்கள், வெளிப்புறத்தைச் சார்ந்தவை. "ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்," என்று இயேசு கூறும் சவால்கள், நமது மனசாட்சியைச் சார்ந்தவை.

தொடர்ந்து மூன்று வாரங்களாய், இயேசு, தன் மலைப்பொழிவின் வழியே, சவால்களை நம்முன் வைத்துள்ளார். இப்படியும் வாழமுடியுமா என்ற பிரமிப்பை எழுப்பும் சவால்கள் இவை. இப்படி வாழ்ந்தால் எவ்வளவோ சிறப்பாக இருக்குமே என்ற ஏக்கத்தை எழுப்பும் சவால்கள் இவை. நல்லவற்றை நடைமுறைப்படுத்த நம் மனதில் எழும் கேள்விகள், பிரமிப்புகள், ஏக்கங்கள், கனவுகள் அனைத்தும், நம்மைப் புனிதத்தின் சிகரம் நோக்கி அழைத்துச் செல்லும் படிகற்கள். இந்தப் படிகளில் பணிவோடு ஏறிச்செல்லும் பக்குவத்தை இறைவன் வழங்கவேண்டுமென்று மன்றாடுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.