பிப்.11,2017. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களையும், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களையும் ஒன்றாகப் பார்க்கும் போதெல்லாம் நாம் அனைவரும் மகிழ்வாய் இருக்கின்றோம், மற்றும் திருஅவையில், இவ்விரு திருத்தந்தையரும் ஒன்றித்திருப்பது, நல்லதோர் எடுத்துக்காட்டு என, இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள் கூறினார்.
முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், தனது தலைமைப் பணியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததன் நான்காம் ஆண்டு, இச்சனிக்கிழமையன்று நிறைவுற்றதை முன்னிட்டு, வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த, திருப்பீடத்தின் முன்னாள் செய்தித் தொடர்பாளரும், வத்திக்கான் வானொலியின் முன்னாள் இயக்குனருமாகிய, அருள்பணி லொம்பார்தி அவர்கள், தற்போது திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் வாழ்ந்துவரும் முறை பற்றிப் பகிர்ந்து கொண்டார்.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் வாழ்ந்துள்ளது மற்றும், தற்போது வாழ்ந்து வருவதை நோக்கும்போது, ஓய்வு காலத்தில் செபத்தில் செலவழிக்க வேண்டுமென்று அவர் முன்னரே கூறியது நினைவுக்கு வருகின்றது என்று கூறினார், அருள்பணி லொம்பார்தி.
திருஅவைக்காகவும், தனக்குப் பின்னால் தலைமைப் பணியை ஆற்றுகிறவருக்காகவும் செபித்துவரும், முன்னாள் திருத்தந்தை ஒருவரைக் கொண்டிருப்பது எத்துணை நல்லது என்றும், அருள்பணி லொம்பார்தி அவர்கள் தெரிவித்தார்.
முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், 2013ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி, தனது தலைமைப் பணியிலிருந்து ஓய்வு பெறுவதாக, திடீரென அறிவித்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |