2017-02-02 15:30:00

தேவையில் இருப்போரை வரவேற்போம் - பிப்ரவரி செபக்கருத்து


பிப்.02,2017. தேவையில் இருப்போரை வரவேற்போம் என்ற தலைப்பில், பிப்ரவரி மாதத்திற்கென குறிக்கப்பட்ட திருத்தந்தையின் செபக்கருத்து, இப்புதனன்று மாலை, ஒரு காணொளித் தொகுப்பாக வெளியானது.

உயர்ந்த கட்டடங்கள், பல்பொருள் அங்காடிகள், வீட்டு வசதி தொழில் ஒப்பந்தங்கள் ஆகியவை கொண்ட நகரங்களில் நாம் வாழ்கிறோம், ஆனால், நம்மில் சிலரை சமுதாயத்தின் ஓரத்தில் கைவிட்டுவிடுகிறோம் என்ற சொற்களுடன், திருத்தந்தை, இந்தக் காணொளித் தொகுப்பை துவக்கியுள்ளார்.

இஸ்பானிய மொழியில் திருத்தந்தை வெளியிட்டிருக்கும் இந்தக் காணொளித் தொகுப்பில், சமுதாயத்தின் ஓரத்தில் கைவிடப்பட்டோரை, நாம் கைவிடக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எனவே, தன்னுடன் நம்மையும் செபத்தில் இணையும்படி விண்ணப்பிக்கும் திருத்தந்தை, வறியோர், புலம்பெயர்ந்தோர், சமுதாயத்தின் ஓரங்களில் தள்ளப்பட்டோர், நமது சமுதாயங்களில் வரவேற்பும், வசதிகளும் பெறவேண்டும் என்பதை இம்மாத செபக்கருத்தாக வெளியிட்டுள்ளார்.

இயேசு சபையினரின் ஒரு தனிப்பட்ட முயற்சியாக இயங்கிவரும் செபத் திருத்தூதுப் பணியை ஒருங்கிணைப்போர், இவ்வாண்டு, திருத்தந்தை வெளியிடும் செபக்கருத்துக்கள், ஒவ்வொரு மாதமும் ஒரே ஒரு கருத்தாக இருக்கும் என்றும், அவசரத் தேவைகள் எழும் வேளையில், மாதத்தின் முதல் ஞாயிறு, திருத்தந்தை வழங்கும் மூவேளை செப உரையின்போது, கூடுதல் கருத்துக்களை அவர் வெளியிடுவார் என்றும், கூறியுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.