2017-01-31 15:55:00

காலநிலை மாற்றம், பெண்களையும், ஏழைகளையும் பாதிக்கின்றது


சன.31,2017. பெண்களும், ஏழைகளும், நலிந்த மக்களுமே, காலநிலை மாற்றத்திற்கு முதலில் பலியாகின்றனர் என, மும்பை பேராயர் கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள் கூறினார்.

நாம் படைப்பின் நிர்வாகிகளே தவிர, அதன் முதலாளிகள் அல்ல எனவும், படைப்பைப் பாதுகாத்து, நிர்வகிப்பதற்கு, நன்னெறி சார்ந்த கடமை நமக்கு உள்ளது எனவும் கூறினார், கர்தினால் கிரேசியஸ்.

“காலநிலை மாற்றம் : நலிந்த குழுக்கள் மற்றும், பெண்கள் மீது தாக்கம்” என்ற தலைப்பில், FABC என்ற, ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பு, அண்மையில் மும்பையில் நடத்திய கருத்தரங்கில், இவ்வாறு உரையாற்றினார், இக்கூட்டமைப்பின் தலைவரான, கர்தினால் கிரேசியஸ்.

உலகில், வெப்பநிலை உயர்வுக்குக் காரணமாகும், கார்பன்டை ஆக்சைடு வெளியேற்றத்திற்கு, தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளே முக்கிய காரணமாக இருந்தாலும், வளரும் நாடுகளும், தெற்கு ஆசியா உட்பட, பொருளாதாரத்தில் வளர்ந்துவரும் பகுதிகளும், புவி மண்டலம் மாசடைவதற்குக் காரணமாகி வருகின்றன எனவும் தெரிவித்தார் கர்தினால் கிரேசியஸ்.  

FABC நடத்திய, காலநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கில், பங்களாதேஷ், நேபாளம் மற்றும் இந்தியாவிலிருந்து, 45 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

ஆதாரம்: Fides /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.