2017-01-28 14:15:00

பாசமுள்ள பார்வையில்... மன்னிப்பைச் சொல்லித்தரும் அன்னையர்


2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ம் தேதி, ISIS தீவிரவாதிகள் வெளியிட்ட ஒரு காணொளித் தொகுப்பு, உலகை அதிர்ச்சியில் உறையச் செய்தது. லிபியா கடற்கரையில் 21 கிறிஸ்தவ இளைஞர்கள் கழுத்து அறுபட்டு கொலையுண்ட காட்சி, அந்த காணொளியில் பதிவாகியிருந்தது. இக்கொடூரத்தைக் கண்ட உலக அரசுகளில் சில, பழிக்குப் பழி என்ற பாணியில் அறிக்கை வெளியிட்டன, செயலாற்றின. ஆனால், இந்தக் கொடூரத்தில் தன் இரு மகன்களை இழந்த ஒரு தாயும், அவரது இளைய மகனும் கூறிய வார்த்தைகள், இவ்வுலகில் இன்னும் மனிதர்கள் வாழ்கின்றனர் என்ற நம்பிக்கையைத் தந்தன.

Beshir என்ற 21 வயது இளைஞனின் அண்ணன்களான, Bishoy, Samuel இருவரும், கழுத்து அறுபடுவதற்கு முன், இயேசு கிறிஸ்துவின் பெயரை உரத்தக் குரலில் கூறியபடியே இறந்தனர். "அந்த வீடியோவின் ஒலிப்பதிவை மௌனமாக்காமல், ISIS குழுவினர், அப்படியே வெளியிட்டதால், என் அண்ணன்கள் இருவரும் கழுத்து வெட்டப்படும்போது, இயேசு கிறிஸ்துவின் பெயரை உரத்தக் குரலில் சொன்னது, எங்கள் விசுவாசத்தை இன்னும் உறுதிப்படுத்தியுள்ளது" என்று Beshir கூறினார்.

இளையவர் Beshir, அந்த நேர்காணலில், தன் தாயைக் குறித்து சொன்னதும், நம் உள்ளத்தில் ஆழமாகப் பதிகிறது. Bishoy, Samuel என்ற இரு மகன்களையும் பறிகொடுத்த தன் தாயிடம், "அம்மா, ISIS தீவிரவாதிகளில் ஒருவரை நீங்கள் சந்தித்தால், என்ன செய்வீர்கள்?" என்று Beshir கேட்டபோது, அந்தத் தாய், "அந்த மனிதரின் கண்களை இறைவன் திறக்கவேண்டும் என்று மன்றாடுவேன். அம்மனிதரை நம் வீட்டிற்கு அழைத்துச் செல்வேன்" என்று தன் அன்னை கூறியதாக, Beshir தன் பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.

மன்னிப்பைச் சொல்லித்தரும் அன்னையர், பேறுபெற்றோர், ஏனெனில், இவ்வுலகம், வெறுப்பில் வெந்துபோகாமல் அவர்கள் காப்பர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.