2017-01-26 16:16:00

அமெரிக்க மெக்சிகோ நாடுகளுக்கிடையே சுவர் எழுப்புவது ஆபத்தானது


சன.26,2017. அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும், மெக்சிகோ நாட்டிற்கும் இடையே சுவர் எழுப்பும் பணிக்கு அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் டொனால்டு டிரம்ப் அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளது, குடிபெயர்ந்தோர் வாழ்வை பெரும் ஆபத்திற்கு உள்ளாக்கும் என்று, அமெரிக்க ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.

அமெரிக்க ஆயர் பேரவையின் குடிபெயர்தல் பணிக்குழுவின் தலைவர், ஆயர் ஜோ வாஸ்குவெஸ் (Joe S. Vasquez) அவர்கள், டிரம்ப் அவர்களின் முடிவு, பல குடும்பங்களின் அமைதியை சீர்குலைக்கும் ஒரு செயல் என்று கூறியுள்ளார்.

சுவர்களைக் கட்டுவதற்குப் பதில், பாலங்களைக் கட்டவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்துவரும் அழைப்பிற்கு, அமெரிக்க ஆயர்களின் முழு ஆதரவும் உண்டு என்று, ஆயர் வாஸ்குவெஸ் அவர்களின் செய்தி கூறுகிறது.

அமெரிக்க, மெக்சிகோ நாடுகளுக்கிடையே சுவர் எழுப்புதல், குடிபெயர்ந்தோர் குறித்த விதி முறைகளைக் கடினமாக்குதல், குடிபெயர்ந்தோருக்கு அடைக்கலம் தரும் நகரங்களின் நிதி உதவிகளைக் கட்டுப்படுத்துதல் ஆகிய அரசாணைகளில், அரசுத்தலைவர் டிரம்ப் அவர்கள், சனவரி, 25, இப்புதனன்று கையெழுத்திட்டார்.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.