2017-01-24 16:07:00

பிலிப்பீன்ஸ் அரசுத்தலைவருடன் உரையாடலுக்கு ஆயர்கள் தயார்


சன.24,2017. பிலிப்பீன்ஸ் அரசுத்தலைவர் Rodrigo Duterte அவர்களின் போதைப்பொருள் தொடர்புடைய நடவடிக்கை குறித்து, அந்நாட்டு ஆயர்கள் குறைகூறிவரும்வேளை, அரசு, தங்களுடன் உரையாடல் நடத்த முன்வந்திருப்பதை வரவேற்றுள்ளனர், ஆயர்கள்.

பிலிப்பீன்ஸ் அரசின் இம்முயற்சியை வரவேற்றுப் பேசிய, அந்நாட்டு ஆயர் பேவையின் பொது விவகாரப் பணிக்குழுவின் அருள்பணி ஜெரோம் செசிலானோ அவர்கள், இரு தரப்பும் உரையாடலை மேற்கொண்டு, போதைப்பொருள் விவகாரத்தில், ஒரு நல்ல முடிவை எடுப்பது, விவேகம் நிறைந்த செயல் என்று கூறினார்.

பிலிப்பீன்சில் சட்டத்துக்குப் புறம்பே இடம்பெறும் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிப்பதற்கு அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளால், இதுவரை, ஏறக்குறைய, 6,700 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு, அந்நாட்டின் பல ஆயர்கள், தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, ஆயர்கள், தனது இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை தன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என, அரசுத்தலைவர் Rodrigo Duterte அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.