2017-01-20 15:17:00

சிறார் புலம்பெயர்ந்தவர் குறித்து பிரெஞ்சு,ஜெர்மன் ஆயர்கள்


சன.20,2017. உலக குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்ந்தவர் நாளுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட செய்தியின் அடிப்படையில், பிரெஞ்சு மற்றும், ஜெர்மன் ஆயர்கள் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

2014ம் ஆண்டில், 23 ஆயிரமாக இருந்த, சிறார் புலம்பெயர்ந்தவர் எண்ணிக்கை, 2015ம் ஆண்டில், ஏறக்குறைய ஒரு இலட்சமாக உயர்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள ஆயர்கள், கிறிஸ்தவர்களாகிய நாம், இந்த உண்மை நிலையைப் புறக்கணிப்பவர்களாக நடந்துகொள்ள முடியாது என்று கூறியுள்ளனர்.

சிறார் புலம்பெயர்ந்தவர் சார்பாகக் குரல் எழுப்பவும், அவர்களுக்காகச் செபிக்கவும் கேட்டுக்கொண்டுள்ள ஆயர்கள், இச்சிறார், மாண்புடன் வாழ்வதற்கு, நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசியல்வாதிகளை ஊக்கப்படுத்துமாறும் கிறிஸ்தவர்களை வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், பல்லாயிரக்கணக்கில், ஐரோப்பாவுக்குள் குடியேற வருகின்ற புலம்பெயர்ந்த மக்களுக்கு உதவும் நோக்கத்தில், ஐ.நா. புலம்பெயர்ந்தவர் நிறுவனம், 72 உதவி நிறுவனங்களோடு சேர்ந்து, புதிய யுக்தி ஒன்றைத் திட்டமிட்டு வருகின்றது என, அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த இரு ஆண்டுகளில், 13 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள், ஐரோப்பாவுக்குள் புலம்பெயர்ந்துள்ளனர் எனவும், இவர்களைப் பாதுகாப்பது உட்பட, ஐரோப்பா எதிர்கொள்ளும் பல சவால்களைச் சந்திப்பதற்கு, புதிய வழிமுறைகளைத் திட்டமிட்டு வருவதாகவும், அந்நிறுவனம் கூறியுள்ளது.

ஆதாரம் : UN/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.