2017-01-14 16:07:00

குடியேற்றதாரர், அன்னைமரியாவிடம் செபிக்குமாறு திருத்தந்தை..


சன.14,2017. அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழ்கின்ற குடியேற்றதாரர்கள், அன்னை மரியாவிடம் நம்பிக்கையுடன் செபிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அமெரிக்க ஐக்கிய நாட்டில் சிறப்பிக்கப்பட்ட தேசிய குடியேற்றதாரர் வாரத்தை முன்னிட்டு, காணொளிச் செய்தி வழியாக, குடியேற்றதாரரிடம் பேசியுள்ள திருத்தந்தை, இயேசு நமக்கு ஓர் அன்னையைக் கொடுத்திருக்கிறார், அந்த அன்னை, இயேசுவின் தாயும், நம் தாயுமானவர் என்று கூறியுள்ளார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் டொலோரெஸ் மறைப்பணித்தளத்தில், Los Angeles பேராயர் José Gomez அவர்கள், தேசிய குடியேற்றதாரர் வாரத்தைச் சிறப்பித்த திருப்பலியின் இறுதியில், திருத்தந்தையின் இக்காணொளிச் செய்தி திரையிடப்பட்டது.

இன்னும், சனவரி 15, இஞ்ஞாயிறன்று, உரோம் நகரின் Setteville புனித மரியா பங்குத்தளத்திற்குச் சென்று, அங்கு, Sclerosis நோயினால் கடுமையாய் துன்புறும் உதவி பங்குத்தந்தை உட்பட நோயாளர்களைச் சந்திக்கவுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

அப்பங்கில் மேய்ப்புப்பணி பயணத்தையும் மேற்கொள்ளும், உரோம் ஆயரான திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நான்கு பேருக்கு ஒப்புரவு அருளடையாளத்தையும் நிறைவேற்றுவார் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய இத்தாலியில், கடந்த ஆகஸ்ட், அக்டோபர் மாதங்களில் இடம்பெற்ற நிலநடுக்கங்களுக்குப் பின்னர், பிறந்துள்ள சில குழந்தைகளுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமை மாலையில் திருமுழுக்கு அளிக்கிறார் என, திருப்பீடம் அறிவித்துள்ளது.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.