2017-01-06 14:46:00

காலநிலை மாற்றம் பவளப்பாறைகளின் நிற மாற்றத்துக்கு..


சன.06,2017. புவி மண்டலத்தில், கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கு, நடவடிக்கைகள் எடுக்கப்படாமல், தற்போதைய நிலை தொடர்ந்தால், உலகின் மிக முக்கிய சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றான பவளப்பாறைகள் எல்லாவற்றின் நிறம் வெளிறிப்போகக்கூடிய ஆபத்து உள்ளது என, ஐ.நா. எச்சரித்துள்ளது.

ஐ.நா.வின், UNEP நிறுவனம், இவ்வியாழனன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், முதலில், தாய்வான், துருக்கி மற்றும், Caicos தீவுக்கூட்டங்களிலும், அவற்றைத் தொடர்ந்து, பஹ்ரெய்ன், சிலே, மற்றும், பிரெஞ்ச் Polynesia தீவுக்கூட்டங்களிலும் உள்ள பவளப்பாறைகள், இந்தப் பாதிப்பை எதிர்கொள்ளும் என்று சொல்லப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையையொட்டி, உலக அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்த, UNEP நிறுவனத் தலைவர் எரிக் சொல்ஹெய்ம் (Erik Solheim) அவர்கள், பாரிஸ் காலநிலை ஒப்பந்தம் செயல்படுத்தப்பட தீவிர நடவடிக்கைகள் அவசியம் என்று கூறியுள்ளார்.

2014ம் ஆண்டுக்கும், 2016ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், Great Barrier Reef பவளப்பாறைத் தொகுதியில், 90 விழுக்காடு பவளப்பாறைகளின் நிறம் வெளிறிப்போயுள்ளதாகவும், அவற்றில் இருபது விழுக்காடு அழிந்துவிட்டதாகவும், ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

ஆதாரம் : UN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.