2016-12-28 15:11:00

"இறைவன், தன் மென்மையால் நம்மை ஈர்த்துக்கொள்கிறார்"


டிச.28,2016. "வறுமையிலும், வலுவிழந்த நிலையிலும், நம்மில் ஒருவராக பிறந்ததன் வழியே, இறைவன் நம்மீது அன்புகொள்கிறார், தன் மென்மையால் அவர் பக்கம் நம்மை ஈர்த்துக்கொள்கிறார்" என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 28, இப்புதனன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றன.

@pontifex என்ற முகவரியில், டிசம்பர் 28ம் தேதி முடிய  திருத்தந்தை வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 1057 என்பதும், அவரது செய்திகளை ஆர்வத்துடன் தொடர்வோரின் எண்ணிக்கை, 10,150,167 என்பதும் குறிப்பிடத்தக்கன.

திருஅவையில் கொண்டாடப்படும் விழாக்களையும், உலகில் சிறப்பிக்கப்படும் பல்வேறு உலக நாள்களையும் மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்திகளை வெளியிட்டு வருகிறார்.

மேலும், உரோம் நகரின் புனித மேரி மேஜர் பசிலிக்காவின் தலைமை அருள்பணியாளராக இதுவரை பணியாற்றிய கர்தினால் Santos Abril y Castelló அவர்கள் பணி ஒய்வு பெற விரும்பி அனுப்பிய விண்ணப்பத்தை இப்புதனன்று ஏற்றுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அப்பணிக்கு, கர்தினால் Stanislaw Rylko அவர்களை நியமித்துள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் தலைமைப் பணியை ஏற்றதிலிருந்து, பலமுறை, குறிப்பாக, அவரது திருத்தூது பயணங்களையொட்டி புனித மேரி மேஜர் பசிலிக்காவிற்கு சென்று, அன்னை மரியாவின் திரு உருவத்திற்கு முன் செபிப்பது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.