2016-12-27 14:52:00

முன்னாள் திருத்தந்தைக்கு திருத்தந்தை கிறிஸ்மஸ் வாழ்த்து


டிச.27,2016. “கிறிஸ்மஸ், எல்லாவற்றுக்கும் மேலாக, நம்பிக்கையின் சுவையைக் கொண்டுள்ளது, ஏனென்றால், நம் வாழ்வில், எல்லா இருளிலும், கடவுளின் ஒளி, சுடர் விடுகின்றது” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டரில், இச்செவ்வாயன்று, வெளியிடப்பட்டுள்ளன.

மேலும், வத்திக்கானில், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் வாழ்கின்ற, Mater Ecclesiae இல்லம் சென்று, கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு, நேரில் சென்று, கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Mater Ecclesiae இல்லக் கதவை, திருத்தந்தையே தட்டினார் என, திருப்பீட செய்தித் தொடர்பகம் கூறியது.

இவ்விரு திருத்தந்தையரும் சிற்றாலயத்தில் சிறிது நேரம் செபித்த பின்னர், சிறிது நேரம் உரையாடிக்கொண்டிருந்தனர் எனவும், திருப்பீட செய்தித் தொடர்பகம் கூறியது.

வத்திக்கானில், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் வாழ்வது, வீட்டில், ஒரு ஞானமுள்ள தாத்தா வாழ்வதாக உள்ளது என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல்வேறு தருணங்களில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.    

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.